இன்று மஇகா தலைமையகத்தில் மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ ச.விக்னேஸ்வரனும், மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ எம்.சரவணனும் இணைந்து நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் அவர்கள் இந்தத் தகவலைத் தெரிவித்தனர்.
இதன் தொடர்பில் மேலும் விளக்கமளித்த சரவணன் “மஇகா பொதுமக்களிடம் எந்தவித நிதியையும் திரட்டாது. ஆனால் மஇகாவுடன் தொடர்புடையவர்கள் மூலம் சுமார் 1 மில்லியன் ரிங்கிட் வரை திரட்டி தமிழ் நாட்டு அரசாங்கத்திற்கு வழங்க நாங்கள் இலக்கு கொண்டிருக்கிறோம்” என்று கூறினார்.
தமிழகத்தில் மிக மோசமான நிலையில் பரவி வரும் கொவிட்-19 தொற்றுகளைத் தொடர்ந்து, “உலகத் தமிழர்களே உயிர்காக்க நிதி வழங்குவீர்” என்ற கோரிக்கையை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் விடுத்திருக்கிறார்.
தனது முகநூல் பக்கத்தில் காணொலி ஒன்றின் மூலம் உலகத் தமிழர்களுக்கு விடுத்த செய்தியில் ஸ்டாலின் இந்தக் கோரிக்கையை முன் வைத்திருந்தார்.
ஸ்டாலின் வேண்டுகோளைத் தொடர்ந்து மஇகா சார்பிலும், மலேசியத் தமிழர்கள் சார்பிலும் ஒரு கணிசமான தொகை தமிழ் நாடு அரசின் முதலமைச்சர் நிவாணநிதிக்கு வழங்கப்படும் என மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரனும், துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணனும் கூட்டாக அறிவித்திருக்கின்றனர்.
“அதே வேளையில் மலேசியத் தமிழர்களின் கூட்டு முயற்சியாக இந்த மக்கள்நல உதவித் திட்டம் அமைய வேண்டும் என்ற நோக்கில் நாங்கள் செயல்பட விரும்புகிறோம்” எனக் குறிப்பிட்டுள்ள விக்னேஸ்வரனும், சரவணனும், இதன் தொடர்பில் தமிழ் நாடு கொவிட்-19 நிவாரணங்களுக்காக நிதி உதவி அளிக்க விரும்பும் தனி நபர்களும், அமைப்புகளும் மஇகா தலைமையகத்தையோ, அல்லது தங்களையோ நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம் என்றும் தங்களின் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.