Home உலகம் மார்க் கார்னி, கனடாவின் புதிய பிரதமர்! டிரம்பின் வரிவிதிப்புப் போரை எதிர்கொள்ளத் தயார்!

மார்க் கார்னி, கனடாவின் புதிய பிரதமர்! டிரம்பின் வரிவிதிப்புப் போரை எதிர்கொள்ளத் தயார்!

388
0
SHARE
Ad

ஒட்டாவா: எதிர்பார்க்கப்பட்டதைப் போலவே கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

கனடாவின் நடப்புப் பிரதமர் ஜஸ்டின் டுரூடோ பிரதமர் பதவியிலிருந்தும், கனடாவை ஆளும் லிபரல் கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்தும் விலகுவதாக கடந்த ஜனவரியில் அறிவித்ததைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக பிரதமர் பொறுப்பை ஏற்கப் போகிறவர் யார் என்ற கேள்விக்கு விடையாக மார்க் கார்னியின் தேர்வு அமைந்துள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) அவர் ஆளும் லிபரல் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து கனடாவின் அடுத்த பிரதமராகவும் பதவியேற்பார்

இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு முன்பாக நடைபெறவேண்டிய கனடா பொதுத் தேர்தலையும் அவர் எதிர்கொண்டு ஆளும் லிபரல் கட்சியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்ல வேண்டிய நெருக்கடி அவருக்கு ஏற்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

நடப்பு கருத்துக் கணிப்புகளின்படி எதிர்கட்சியான கன்சர்வேடிவ் கட்சி பொதுமக்கள் ஆதரவில் முன்னணியில் இருக்கிறது.

அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையில் வரி விதிப்புகள் தொடர்பான வணிகப் போர் தொடங்கியுள்ள வேளையில் மார்க் கார்னியின் தேர்வு பொருத்தமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

காரணம், முன்னாள் மத்திய வங்கி ஆளுநரான (கவர்னர்) மார்க் கார்னி இங்கிலாந்து, கனடா மத்திய வங்கிகளின் ஆளுநராகப் பணியாற்றி அனுபவம் வாய்ந்தவர்.

புதிய பிரதமராகவும் கட்சித் தலைவராகவும் மார்க் கார்னி  சவாலான காலகட்டத்தில் அந்தப் பொறுப்புகளை ஏற்கவுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் வணிக வரி விதிப்பு தொடர்பான பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு கனடாவுக்கு சாதகமான சூழலை உருவாக்க வேண்டிய நெருக்கடியில் புதில் பிரதமர் உள்ளார்.

அதே வேளையில் அடுத்த பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சியை எதிர்கொண்டு வெற்றி பெறவேண்டிய இக்கட்டான நிலைமையையும் புதிய பிரதமர் எநிர்நோக்குவார்.

59 வயதான கார்னி கனடா, இங்கிலாந்து ஆகிய இரு மத்திய வங்கிகளின் ஆளுநராகப் பணியாற்றி அனுபவம் பெற்றவராவார். இதன் மூலம் டிரம்புடன் வணிகப் போரில் ஈடுபடுவதற்குப் பொருத்தமானவராக கார்னி கருதப்படுகிறார்.

2015-ஆம் ஆண்டு முதல் கனடாவின் பிரதமராக 9 ஆண்டுகளுக்கு பதவி வகித்த டுருடோ தனது 43-வது வயதில் பிரதமரானார்.