பெங்களூரு: ஐபிஎல் 2025 கிரிக்கெட் போட்டிகளில் 18 ஆண்டுகளுக்குப் பின்னர் வெற்றிவாகை சூடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிக்கு கர்நாடக அரசு சார்பில் நடைபெற்ற பாராட்டு விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தது 11 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
நிகழ்ச்சி நடைபெற்ற சின்னசாமி மைதானத்தில் 35,000 பேர் மட்டுமே கலந்து கொள்ளக் கூடிய சூழ்நிலையில் சுமார் 2 இலட்சம் முதல் 3 இலட்சம் பேர்வரை திரண்டதில் நெரிசல் ஏற்பட்டது.
தடுப்பத் தகடுகள் உடைந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த துயரத்திற்குப் பிறகு ஆர்சிபி நிகழ்ச்சிகள் குறைக்கப்பட்டன.
கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சி செல்லுபடியாகும் நுழைவுச் சீட்டுகள், அனுமதி அட்டைகளை வைத்திருப்பவர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் நிகழ்ச்சி என்றாலும், ரசிகர்கள் தங்கள் அணியின் கிரிக்கெட் வீரர்களை ஒருமுறை பார்ப்பதற்காக மைதான வளாகத்தில் திரண்டனர்.
துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் உயிரிழப்புகளை ஒப்புக்கொண்டார், ஆனால் மேலும் எந்த தகவலையும் வெளியிடவில்லை. செய்தியாளர்களிடம் பேசிய சிவகுமார், “கூட்ட நெரிசல் மற்றும் உயிரிழப்பு காரணமாக 10-15 நிமிடங்களில் நிகழ்ச்சியை முடித்துவிட்டோம்,” என்றார்.