(இரா.முத்தரசன்)
பல அம்சங்களில் ‘நாயகன்’ திரைப்படத்தை நினைவுபடுத்தும் காட்சிகள். அன்று கமல் தனியாகவே தன் நடிப்பாலும்- மணிரத்னம் தன் இயக்கத்தாலும்- இதுவரை வெளிவந்த தமிழ்ப் படங்களிலேயே மறக்க முடியாத ஒரு படைப்பாக – திரையில் பிரகாசிக்கச் செய்தனர்.
இந்த முறை கமலோடு மோதுவதற்கு இன்னொரு பிரபலம் சிலம்பரசன் இணைந்திருக்கிறார். மீண்டும் மணிரத்னத்தின் இயக்கம். பரந்து விரிந்த பனிவெளிகள்; ஒட்டகங்கள் அணிவகுத்து நிற்கும் பாலைவனக் காட்சிகள்; எனக் கண்களுக்கு குளிர்ச்சியான விருந்து படைக்க ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன். ஆண்டுகள் கடந்தாலும் கட்டுக் குலையாத அழகுடன் உலா வரும் கவர்ச்சி நாயகியாக திரிஷா. அன்று நாயகனுக்கு இளையராஜா என்றால் இன்று ஏ.ஆர்.ரஹ்மான். கோர்வையாக, பரபரப்பான சண்டைக் காட்சிகளுக்கு அன்பறிவ். சிறந்த படத் தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்தின் கைவண்ணம். இவ்வளவு திறன்வாய்ந்த கலைஞர்களின் கூட்டணியில் உருவான தக்லைப் – நாயகனை விட ஒருபடியாவது மேலோங்கி இருக்க வேண்டுமல்லவா?
இல்லை! அதுவும் இன்னொரு பத்தடி பின்னுக்குத் தள்ளி நிற்கிறது என்பதுதான் படம் பார்த்து விட்டு வெளியே வரும்போது நமக்கு எழும் எண்ணம்!
கதாபாத்திரங்களை செதுக்குவதில் வல்லமை வாய்ந்தவர் மணிரத்னம். ஆனால், கமல், சிம்பு இருவரின் கதாபாத்திரங்களின் உருவாக்கத்திலும் சில கேவலமான குணாதிசயங்களைப் பொதிய வைத்திருக்கிறார் மணிரத்னம். படம் பார்த்து அவை என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள். படத்தின் திரைக்கதையோட்டத்திற்கு தேவையில்லாத குணாதிசய செருகல்கள் அவை!
எனினும் படத்தில் ஜொலிப்பது கமலா – சிம்புவா – என அடுத்த சில வாரங்களுக்கு பட்டிமன்றங்கள் தொடரும்! அந்த அளவுக்கு இருவரும் போட்டி போட்டுக் கொண்டு நடித்திருக்கிறார்கள்.
படத்தை போரடிக்காமல் நகர்த்துவது வழக்கம்போல் மணிரத்னத்தின் காட்சி ஜோடனைகளும், ரவி கே.சந்திரனின் அற்புதமான ஒளிப்பதிவும்தான்! மாறாக, கதையிலோ, திரைக்கதையிலோ, புதிய அம்சங்களோ, எதிர்பார்க்காத திருப்பங்களோ இல்லை.
நாயகன் தொடங்கி – இல்லை இல்லை அதற்கு முன்பிருந்தே – எத்தனையோ படங்களில் நாம் பார்த்துப் பார்த்துச் சலித்த அதே இரண்டு தாதா குழுக்கள் – அவர்களுக்குள் மோதல் – நடுவில் காவல் துறை – ஒரு தாதா, அரசியல் தொடர்பு கொண்ட அரசியல்வாதியாக உயர்வது – காவல் துறை ஒரு தாதா கும்பலுக்கு உதவுவது – இடையில் ஒரு நேர்மையான காவல் துறை அதிகாரி – என வழக்கமான பின்னணியிலேயே திரைக்கதையைப் பின்னியிருக்கிறார் மணிரத்னம். அதுவே, படத்திற்கானப் பின்னடைவு.
துரோகத்தின் மோதல்களை தக் லைஃபைவிட மணிரத்னம், தனது செக்கச் சிவந்த வானம் படத்தில் மேலும் சிறப்பாக, பரபரப்பாகக் காட்டியிருந்தார் எனலாம்.
திரைக்கதையிலும் சில தொய்வுகள், குழப்பங்கள். குறிப்பாக முதல் காட்சியில் சிம்புவின் அப்பாவை சுட்டது நான்தான் என்று கமலே கூற – இறுதிக் காட்சியில் அவர் அதை மறுப்பது – ஏன் எதற்காக, என்ற கேள்விகளை நமக்குள் எழுப்புகிறது. விடை தராமலேயே படத்தை முடிக்கிறார் மணிரத்னம்.
திரைக்கண்ணோட்டத்தில் நாம் என்னதான் கூறினாலும், கமல்-மணிரத்னம்-சிம்பு-ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் – அப்படி என்னதான் இருக்கிறது என்பதைப் பார்ப்போம் என இரசிகர்கள் திரையரங்குகளில் திரள்வது உறுதி. அந்த அளவுக்கு இந்தியா முழுவதும் சுற்றி – ஏன் நம் கோலாலம்பூருக்கும் வருகை தந்து – தக் லைஃப் படத்தைப் பிரபலப்படுத்தியிருக்கிறார்கள்.
இருந்தாலும், மணிரத்னம் முழுவதுமாக நம்மை ஏமாற்றவில்லை என்பதுதான் ஒரே ஆறுதல்!