Home இந்தியா கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க உத்தரவிட முடியாது – உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க உத்தரவிட முடியாது – உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

190
0
SHARE
Ad

புதுடில்லி :கன்னடம், தமிழ் மொழியிலிருந்து தோன்றியது என்ற சர்ச்சைக்குரியக் கருத்தை வெளியிட்டதைத் தொடர்ந்து கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லையென்றால் அவர் நடித்த ‘தக் லைஃப்’ படத்தை கர்நாடகா மாநிலத்தில் திரையிட முடியாது என்றும் கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம் கமல்ஹாசனை மன்னிப்பு கேட்கச் சொல்லி கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட முடியாது என அதிரடியாக இன்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 17) தீர்ப்பளித்தது. ஒரு படம் தணிக்கைக் குழுவிடம் இருந்து தணிக்கைச் சான்றிதழ் பெற்றதும் அந்தப் படத்தை வெளியிடுவதற்கான கடமை அரசாங்கத்திற்கு உண்டு, அதற்கான பாதுகாப்பை வழங்க வேண்டியது காவல் துறையின் பொறுப்பு என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.

இதைத் தொடர்ந்து கமல்ஹாசன்- சிலம்பரசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கியுள்ள ‘தக் லைஃப்’ திரைப்படம் கர்நாடகத்தில் வெளியிடப்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

#TamilSchoolmychoice

எனினும், கடந்த ஜூன் 5-ம் தேதி உலகம் முழுவதும் வெளியான இந்தத் திரைப்படம் மோசமான விமர்சனங்களைச் சந்தித்தது.  வசூலிலும் பின்னடைவை எதிர்நோக்கியது. எனவே, தக்லைஃப் கர்நாடகா மாநிலத்தில் வெளியீடு காணுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த படத்திற்கான விளம்பரங்களை மேற்கொள்ள இந்தியா முழுவதும் மணிரத்தினம் குழுவினரும் கமலஹாசன்-சிம்பு உள்ளிட்ட படக்  குழுவினரும் சுற்றுச் சுழன்று இந்தியா முழுவதும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு படம் குறித்த தகவல்களை பிரபலப்படுத்தினர்.

மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கும் ‘தக் லைஃப்’ படக் குழுவினர் சார்பில் கமல்ஹாசனும் திரிஷாவும் வருகை தந்தனர்.

இதன் தொடர்பில் பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கமலஹாசன் மேடையில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமாரை வைத்துக் கொண்டே, “கன்னடம் தமிழில் இருந்து தோன்றிய மொழி” என பேசினார். அந்த கருத்து கர்நாடக மாநிலத்தில் மிகப்பெரும் சர்ச்சையாகி ‘தக் லைஃப்’ திரைப்படத்திற்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன. பல இடங்களில் அந்தப் படத்தின்  பதாகைகள் சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டன.

கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டுமென கர்நாடக அமைப்புகள் போர்க்குடி தூக்கின. இந்நிலையில் “நான் சொன்னது சொன்னதுதான்! நான் தவறாக சொல்லவில்லை நான் சொன்னது தவறு அல்லது பொய் என்று நிரூபியுங்கள். அப்படி நிரூபித்தால் நான் மன்னிப்பு கேட்கிறேன்” என்று கமல்ஹாசன் பதிலடி கொடுத்தார்.

இதனால் ‘தக் லைஃப்’ திரைப்படம் கர்நாடகாவில் திரையிடப்பட தடை விதிக்கப்பட்டது. இதற்கான தடையை அறிவித்த கர்நாடக பிலிம் சேம்பர் அமைப்பும் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கூறியது.

இதற்கிடையில் தமிழ்த் திரை உலகின் பல கலைஞர்களும் கமல்ஹாசனுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். இந்த மொழிப் போரால் பிரச்சனையில் சிக்கிய ‘தக் லைஃப்’ படம் திட்டமிட்டபடி கர்நாடகாவில் ஜூன் 5-ஆம் தேதி வெளியாகவில்லை.

என்ன நடந்தாலும் நான் எனது கருத்தை மீட்டுக் கொள்ளப் போவதில்லை, இதனால் படத்தை திரையிடும் விநியோகஸ்தருக்கு இழப்பு ஏற்பட்டால் அதனை நானே ஈடுகட்டுகிறேன் என கமல் கூறியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எழுபது வயதான கமலஹாசன் அண்மையில்தான் திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக அறிவிக்கப்பட்டார்.

இதற்கு முன்னர் இது போன்ற பல மிரட்டல்களை தான் சந்தித்துள்ளதாகவும் இதற்கெல்லாம் அஞ்சப் போவதில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

எனது வாழ்க்கையும் எனது குடும்பமும் தமிழ் தான் என்று கூறிய கமல்ஹாசன் நடிகர் சிவராஜ்குமார் கர்நாடகாவை சேர்ந்தவராக இருந்தாலும் அவரும் எனது குடும்பம்தான் – ஆனால் இன்னொரு மாநிலத்தில் வசிக்கிறார் – அதுதான் வித்தியாசம் என்று கூறியிருந்தார்.

“உயிரும் உறவும் தமிழ் என்ற முழக்கத்தோடுதான் நான் எனது உரையை ஆரம்பித்தேன். கன்னடம் தமிழில் இருந்து தோன்றியதுதான். அதனால் இரண்டும் ஒன்றாகக் கலந்தவை” என்றும் அவர் கூறியிருந்தார்.