சென்னை : கமல்ஹாசன்- சிலம்பரசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கியுள்ள ‘தக் லைஃப்’ திரைப்படம் எதிர்வரும் ஜூன் 5-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்த படத்திற்கான விளம்பரங்களை மேற்கொள்ள இந்தியா முழுவதும் மணிரத்தினம் குழுவினரும் கமலஹாசன்-சிம்பு உள்ளிட்ட படக் குழுவினரும் சுற்றுச் சுழன்றி இந்தியா முழுவதும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு படம் குறித்த தகவல்களை வெளியிட்டும் பிரபலப்படுத்தியும் வருகின்றனர்.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கும் வருகை மேற்கொள்ளும் ‘தக் லைஃப்’ படக் குழுவினர் நாளை மை டவுன் பேரங்காடியில் நடைபெறும் ரசிகர்களுடனான நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.
இதன் தொடர்பில் பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கமலஹாசன் மேடையில் பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமாரை வைத்துக் கொண்டே, “கன்னடம் தமிழில் இருந்து தோன்றிய மொழி” என பேசினார். அந்த கருத்து கர்நாடக மாநிலத்தில் மிகப்பெரும் சர்ச்சையாகி ‘தக் லைஃப்’ திரைப்படத்திற்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்திருக்கின்றன. பல இடங்களில் அந்தப் படத்தின் பதாகைகள் சுவரொட்டிகள் கிழிக்கப்பட்டிருக்கின்றன.
கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டுமென கர்நாடக அமைப்புகள் போர்க்குடி தூக்கி உள்ளன. இந்நிலையில் “நான் சொன்னது சொன்னதுதான்! நான் தவறாக சொல்லவில்லை நான் சொன்னது தவறு அல்லது பொய் என்று நிரூபியுங்கள். அப்படி நிரூபித்தால் நான் மன்னிப்பு கேட்கிறேன்” என்று கமல்ஹாசன் பதிலடி கொடுத்துள்ளார்.
இதனால் ‘தக் லைஃப்’ திரைப்படம் கர்நாடகாவில் திரையிடப்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான தடையை அறிவித்த கர்நாடக பிலிம் சேம்பர் அமைப்பும் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கூறி இருக்கிறது. இதற்கிடையில் தமிழ்த் திரை உலகின் பல கலைஞர்களும் கமல்ஹாசனுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் இந்த மொழிப் போரால் பிரச்சனையில் சிக்கியுள்ளது ‘தக் லைஃப்’ படம்தான். கர்நாடகாவில் ஜூன் 5-ஆம் தேதிக்குள் பிரச்சனைகள் தீர்ந்து இந்தப் படம் திரையீடு காணுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
என்ன நடந்தாலும் நான் எனது கருத்தை மீட்டுக் கொள்ளப் போவதில்லை, இதனால் படத்தை திரையிடும் விநியோகஸ்தருக்கு இழப்பு ஏற்பட்டால் அதனை நானே ஈடுகட்டுகிறேன் என கமல் கூறியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எழுபது வயதான கமலஹாசன் அண்மையில்தான் திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக அறிவிக்கப்பட்டார். அதற்கு முன்பாகவே அவர் இந்த சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இதற்கு முன்னர் இது போன்ற பல மிரட்டல்களை தான் சந்தித்துள்ளதாகவும் இதற்கெல்லாம் அஞ்சப் போவதில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார். எனது வாழ்க்கையும் எனது குடும்பமும் தமிழ் தான் என்று கூறிய கமல்ஹாசன் நடிகர் சிவராஜ்குமார் கர்நாடகாவை சேர்ந்தவராக இருந்தாலும் அவரும் எனது குடும்பம்தான் – ஆனால் இன்னொரு மாநிலத்தில் வசிக்கிறார் – அதுதான் வித்தியாசம் என்று கூறியுள்ளார்.
“உயிரும் உறவும் தமிழ் என்ற முழக்கத்தோடுதான் நான் எனது உரையை ஆரம்பித்தேன். கன்னடம் தமிழில் இருந்து தோன்றியதுதான். அதனால் இரண்டும் ஒன்றாகக் கலந்தவை” என்றும் அவர் கூறியிருக்கிறார்