சென்னை : ராஜ்ய சபா என்னும் நாடாளுமன்ற மாநிலங்களவையில் தமிழ்நாட்டின் சார்பிலான ஆறு இடங்கள் காலியாவதைத் தொடர்ந்து எதிர்வரும் ஜூன் 19-ஆம் தேதி அந்தப் பதவிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.
அந்த ஆறு இடங்களில் நான்கு இடங்களை வெல்லும் வாய்ப்பு இருப்பதால் திமுக தலைமை 4 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான பெயர்களை இன்று புதன்கிழமை (மே 28) அறிவித்தது.
அவர்களில் கமல்ஹாசனும் ஒருவராவார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி ஆதரவளித்தது. அதற்கு பிரதிபலனாக கமல்ஹாசனுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படும் என மு.க.ஸ்டாலின் உறுதியளித்திருந்தார். அதற்கேற்ப, கமலுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது.
கமலைத் தவிர, தி.மு.க சார்பில் வழக்கறிஞர் பி.வில்சன், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.ஆர்.சிவலிங்கம், கவிஞர் சல்மா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

வில்சனுக்கு இரண்டாவது தவணையாக இந்தப் பதவி வழங்கப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி சேலத்தைச் சேர்ந்தவர் என்பதால், அந்த மாவட்டத்தை மேலும் அரசியல் ரீதியாக வலுவாக்க சிவலிங்கத்திற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.
கவிஞர் சல்மா பெண்மணி என்பதோடு, இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் சிறுபான்மை சமூகத்தினருக்கு வாய்ப்பு வழங்கும் விதத்தில் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான வாய்ப்புகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. திமுகவின் நான்கு உறுப்பினர்களில் ஒருவர் இஸ்லாமியர், ஒருவர் கிறிஸ்துவர் என்பதால் அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் சிறுபான்மை சமூகத்தினரின் வாக்குகளைக் குறிவைத்து திமுக நகர்கிறது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியிருக்கிறது.
அதிமுகவுக்கு இரண்டு இடங்கள் கிடைக்கும் என்பதால் அந்த இரண்டு வேட்பாளர்கள் யார் என்பதைக் காண தமிழ்நாடு அரசியல் களம் காத்திருக்கிறது.
வைகோவுக்கு திமுக மீண்டும் வாய்ப்பு வழங்கவில்லை. அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படமாட்டாது, என்பது கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போதே அவருக்குத் தெரிவிக்கப்பட்டுவிட்டதாகவும் அதனால்தான் அவரின் மகன் துரை வைகோவுக்கு திருச்சி நாடாளுமன்றத் தொகுதி கடந்த பொதுத் தேர்தலில் ஒதுக்கப்பட்டது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.