இந்த ஆண்டுக்கான தேசிய அளவிலான ஆசிரியர் தினக் கொண்டாட்டம் சரவாக் தலைநகர் கூச்சிங்கில் கடந்த மே 16-ஆம் தேதி நடைபெற்றது. அந்த கொண்டாட்டத்தில் சிறந்த சேவையாற்றிய ஆசிரியர்களுக்கு 31 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன விருதுகள் பெற்றவர்களில் மாசாய் தமிழ் பள்ளி ஆசிரியர் முனைவர் கஸ்தூரி இராமலிங்கமும் ஒருவராவார். இவருடன் சேர்த்து நான்கு இந்திய கல்வியாளர்களுக்கு இந்த முறை நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டன.
கஸ்தூரி இராமலிங்கத்திற்கு சிறந்த மொழி ஆசிரியருக்கான பிரிவில் – Guru Hebat Bahasa – விருது வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டு பகாங் மாநிலத்தில் நடைபெற்ற ஆசிரியர் தின கொண்டாட்டத்திலும் கஸ்தூரி இராமலிங்கம் சிறந்த தன்னார்வ ஆசிரியர் – Guru Kesukarelawan – விருதை பெற்றார்.
ஆசிரியர் தொழிலைத் தவிர்த்து தமிழ் மொழி தொடர்பான முன்னெடுப்புகளிலும் கஸ்தூரி இராமலிங்கம் கவனம் செலுத்தி வருகிறார். ஆரம்ப நிலையிலான மாணவர்களும், முறையான தமிழ்க் கல்வியைப் பெற்றிராதவர்களும் தமிழ் கற்றுக் கொள்ள முனைந்திருப்பவர்களுக்கும் உதவும் பொருட்டு “30 நாள்களில் தமிழ்” என்ற இணையம் வழி தமிழை போதிக்கும் திட்டத்தையும் அவர் செயல்படுத்தியுள்ளார். இந்தத் திட்டத்தின் தொடக்க விழா கடந்த 8.3.2025-ஆம் நாள் கோலாலம்பூரில் நடைபெற்றது.
ஆசிரியர் தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு முனைவர் அருள்நாதன் விசுவாசம், முனைவர் சிவா, கார்த்திகேசன் மாணிக்கவாசகம் ஆகியோரும் சிறந்த ஆசிரியர்களுக்கான விருதுகளைப் பெற்றனர்.
விருது பெற்ற இந்தியக் கல்வியாளர் முனைவர் அருள்நாதன் விசுவாசம் ஈப்போ ஆசிரியர் கல்விக் கழகத்தில் பணியாற்றுகிறார். அவருக்கு Pensyarah berwibawa என்ற பிரிவில் சிறந்த ஆசிரியருக்கான விருதைப் பெற்றார்,
முனைவர் சிவா சிலிம்ரிவர், நுட்பவியல் கல்லூரியில் பணியாற்றுகிறார். அவருக்கு Adiguru என்ற பிரிவில் சிறந்த ஆசிரியருக்கான விருது வழங்கப்பட்டது.
கார்த்திகேசன் மாணிக்கவாசகம் சூன் லீ தோட்டத் தமிழ்ப் பள்ளியில் பணியாற்றுகிறார், Guru Inovatif Sekolah Rendah – என்ற பிரிவில் சிறந்த ஆசிரியருக்கான விருதைப் பெற்றார்.