கோலாலம்பூர்: பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், தன்மீது தொடுக்கப்படும் வழக்குகளில் இருந்து சட்ட விலக்கு பெறத் தகுதியுள்ளவரா என்பது உள்ளிட்ட எட்டு சட்டக் கேள்விகளை கூட்டரசு( பெடரல்) நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்க மனு ஒன்றைத் தாக்கல் செய்து அதற்கான முன் அனுமதியை கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் கோரியிருந்தார்.
அவரது விண்ணப்பத்தை நேற்று புதன்கிழமை (மே 4) தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றத்தின் முடிவுக்கு எதிராக மேல்முறையீடு ஒன்றை அவர் இன்று தன் வழக்கறிஞர்கள் மூலம் தாக்கல் செய்துள்ளார்.
இன்று வியாழக்கிழமை (ஜூன் 5) ஜைன் மெகாட் & முராத் மூலம் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டில், நீதிபதி ரோஸ் மாவார் ரோசைன் வழங்கிய தீர்ப்பு முழுவதிலும் தனக்கு திருப்தியில்லை என்று அன்வார் கூறியுள்ளார். இந்தத் தீர்ப்பில், வாதியான யூசோப் ராவுத்தருக்கு RM20,000 செலவுத் தொகையும் செலுத்தப்பட வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
அன்வாரின் இந்த விண்ணப்பம், அவரது முன்னாள் ஆராய்ச்சி உதவியாளர் முஹம்மது யூசோப் ராவுத்தர் தாக்கல் செய்த பாலியல் துன்புறுத்தல் வழக்கு தொடர்பானதாகும். 2018 இல் அன்வார் தன்னை பாலியல் ரீதியாகத் தாக்கியதாக யூசோப் ராவுத்தர் குற்றம் சாட்டியிருந்தார்.
புதன்கிழமை (ஜூன் 4) அன்று, நீதிபதி ரோஸ் மாவார், கூட்டாட்சி அரசியலமைப்பு, நீதிமன்றங்கள் சட்டம் ஆகியவற்றின் கீழ் குறிப்பிடப்படுவதற்கான வரம்பை அன்வார் எழுப்பிய கேள்விகள் பூர்த்தி செய்யத் தவறியதால் அன்வாரின் விண்ணப்பத்தை தள்ளுபடி செய்தார்.
தனது தீர்ப்பில், கேள்விகள் எந்தவொரு குறிப்பிடத்தக்க அரசியலமைப்பு சிக்கல்களையும் எழுப்பவில்லை என்று அவர் கூறினார்.
வழக்கை விசாரித்து வரும் உயர் நீதிமன்றம், சட்டக் கேள்விகளை உச்ச நீதிமன்றமான கூட்டரசு நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட அனுமதி வழங்க வேண்டுமென மே 23 அன்று அன்வார் விண்ணப்பித்திருந்தார்.
ஜூலை 14, 2021 அன்று, முகமது யூசோஃப், அன்வார் மீது பாலியல் தாக்குதல் வழக்கு தாக்கல் செய்தார். அன்வார் தனது தற்காப்பில், அந்த முன்னாள் உதவியாளர் கூறும் பாலியல் தாக்குதல் சம்பவம் குறித்து அதிகாரிகளிடம் பொய் கூறியதாக வாதிட்டார்.
அன்வார் செப்டம்பர் 28, 2021 அன்று ஒரு எதிர்-வழக்கு தாக்கல் செய்தார். அதில் முகமது யூசோப், தனது அரசியல் வாழ்க்கையை களங்கப்படுத்தவும், தான் பிரதமராக வருவதைத் தடுக்கவும் பாலியல் தாக்குதல் கதையை புனைந்ததாக குற்றம் சாட்டினார்.
நீதிபதி ரோஸ் மாவார் ரோசைன், நேற்றைய தீர்ப்பில் அன்வாரின் பாதுகாப்பு, நிர்வாக செயல்பாட்டிற்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பான கோரிக்கைகளுக்கு அரசியலமைப்பு அடிப்படையில்லை என்று தனது தீர்ப்பில் கூறியதோடு, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதையும் வலியுறுத்தினார்.
எனவே, ஜூன் 16-ஆம் தேதியன்று திட்டமிட்டபடி வழக்கு விசாரணையை தொடர அவர் உத்தரவிட்டார்.
பிரதமராகிய தான் சிவில் வழக்குகளிலிருந்து விலக்கு பெற உரிமையுள்ளவரா என்பது குறித்த எட்டு அரசியலமைப்பு கேள்விகளை கூட்டரசு மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்து அதற்கான தீர்ப்பு வரும் வரை நடப்பு பொது (சிவில்) வழக்கின் நடவடிக்கைகளை ஒத்திவைக்க அன்வார் கோரியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணை அனுமதிக்கப்படுவது தனது நிர்வாகப் பொறுப்புகளை திறம்படச் செய்ய தனது திறனை சமரசம் செய்யுமா? அதிகாரப் பிரிவின் அரசியலமைப்பு கோட்பாட்டை மீறுமா? என்பதையும் கூட்டரசு நீதிமன்றம் தீர்மானிக்க அவர் கோரியிருந்தார்.