Home கலை உலகம் சினிமாவை விட்டு வெளியேறுகிறார் கானா பாலா!

சினிமாவை விட்டு வெளியேறுகிறார் கானா பாலா!

637
0
SHARE
Ad

Gana-Bala-6-1024x682சென்னை, ஜூலை 18- கடந்த நான்கு ஆண்டுகளாகக் ‘கானா பாலா’ பாடல் இல்லாமல், பெரும்பாலான படங்கள் வந்ததில்லை. சில படங்களில் அவரே பாடி நடிக்கவும் செய்திருக்கிறார். அந்த அளவுக்குத் தமிழ்ச் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு படைப்பாளியாக இருக்கும் கானா பாலா, தற்போது “பாடினது, ஆடினது போதும் என்று என் மனம் சொல்கிறது. அதனால் தான் கொஞ்சம் ஒதுங்கியிருக்கலாம் என்று நினைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

புதுமுக இயக்குநர் சத்ய சரவணா இயக்கத்தில் தயாராகியுள்ள படம் ‘மஞ்சள்’.

இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கானா பாலா பேசியதாவது:

#TamilSchoolmychoice

“நான் இதுவரைக்கும் 75 படங்களில் நடித்திருக்கிறேன். 300-க்கும் அதிகமான பாடல்களை பாடியிருக்கிறேன். இதில் பெரும்பாலான பாடல்களை நானே எழுதியிருக்கிறேன்.

நான் யாரிடமும் வாய்ப்புக் கேட்டுப் போனது கிடையாது. எனக்கு வந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொண்டேன். கொஞ்சம், கொஞ்சமாக மேலே வந்திருக்கிறேன். யாரிடமும் எனக்கு இவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டதில்லை.

பெண்களை மட்டம் தட்டியோ வக்கிரங்களைத் தூண்டுவது மாதிரியோ நான் பாடல் பாடியதில்லை. காதல் ஒரு புறம் இருந்தாலும், இன்னொரு பக்கம் போய் உன் பொழப்பையும் பார் என்பது மாதிரியான பாடல்களைத் தான் பாடி இருக்கிறேன்.

பாடினது, ஆடினது போதும் என்று என் மனம் சொல்லியது. அதனால் தான் கொஞ்சம் ஒதுங்கியிருக்கலாம் என்று நினைத்திருக்கிறேன். நான் ஒதுங்குவதால் கானா பாடல்கள் காணாமல் போய்விடாது. எனக்குப் பின்னாடி நிறைய கானா பாடகர்கள் வந்துவிட்டார்கள். அவர்கள் அனைவருக்கும் வாய்ப்புக் கிடைக்க வேண்டும் என்று நானே விலகிக் கொள்ளலாம் என நினைக்கிறேன்.

நானே சில பாடகர்களை, இசையமைப்பாளர்களிடம் கூட்டிக் கொண்டு போய் இவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் எனக் கேட்டிருக்கிறேன். அவர்கள் அதனை நல்ல முறையில் பயன்படுத்தி மேலே வந்தால் எனக்கு மகிழ்ச்சி தான்.

நான் விலகப் போகிறேன் என்று சொன்னதால் முற்றிலும் ஒதுங்கப் போகிறேன் என்று சொல்லுவதாக அர்த்தம் கிடையாது. நான் மட்டுமே பாடணும், நடிக்கணும் என்று என்னைத் தேடிவரும் வாய்ப்புகளை மட்டும் விட மாட்டேன்” என்றார்.

கானா பாலாவிற்கு என்னாயிற்று? ஏன் இந்தத் திடீர் முடிவு? நன்றாகத்தானே போய்க் கொண்டிருக்கிறது.அப்புறம் ஏன்? ஒரே மாதிரிப் பாடி அலுத்துவிட்டதா? என்கிற ரீதியில் திரையுலகினர் பேசிக் கொள்கிறார்கள்.