Home நாடு “1எம்டிபி-யில் இருந்து விலகிக் கொள்ளும் படி கூறினேன்; ஆனால் நஜிப் கேட்கவில்லை” – மொகிதின்

“1எம்டிபி-யில் இருந்து விலகிக் கொள்ளும் படி கூறினேன்; ஆனால் நஜிப் கேட்கவில்லை” – மொகிதின்

457
0
SHARE
Ad

Najib Muhyiddinகோலாலம்பூர், ஜூலை 27 – 1எம்டிபி நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து பிரதமர் நஜிப் துன் ரசாக்கை தான் விலகிக் கொள்ளும்படி கூறியதாகவும், ஆனால் அதை அவர் மறுத்துவிட்டதாகவும் துணைப்பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் கூறியுள்ளார்.

தான் இதை எந்த ஒரு உள்நோக்கத்துடனும் பிரதமருக்கு அறிவுறுத்தவில்லை என்றும், மாறாக, கடனில் மூழ்கித் தவிக்கும் அரசாங்க முதலீட்டின் காரணமாக, நஜிப் தனது நற்பெயரைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் தான் கூறியதாகவும் மொகிதின் நேற்று இரவு நடைபெற்ற அம்னோ செராஸ் தொகுதிக் கூட்டத்தில் பேசுகையில் தெரிவித்துள்ளார்.

1எம்டிபி விவகாரம் தவிர்க்க இயலாத ஒன்று, அதைத் தீர்க்க வழிகளைத் தான் கண்டறிய வேண்டும் என்றும் மொகிதின் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

“1எம்டிபி விவகாரத்தில் பிரதமரே ஒரு முடிவுக்கு வந்த பிறகும் கூட, இந்த விவகாரத்தில் தீர்வு காணுங்கள். மற்றவர்களைக் குறை கூறாதீர்கள் எனக் குரல் கொடுத்த முதல் அமைச்சர் நான். இதை அம்னோ தலைமைத்துவத்திலும், அமைச்சரவைக் கூட்டங்களிலும் தொடர்ச்சியாகக் கூறி வருகின்றேன்” என்றும் மொகிதின் தெரிவித்துள்ளார்.

மேலும், “42 பில்லியன் கடனுடன் 1எம்டிபி நிறுவனத்தை நடத்துவது மிகவும் கடினம். நாட்டின் பல மாநிலங்களில் ஒதுக்கப்பட்ட நிதியை விட நிதி கூடுதலாகி விட்டது. அது நமது நாட்டிற்கு பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தி ரிங்கிட் சரிவிற்குக் காரணமாகிவிடும் என்று முன்பே நஜிப்பிடம் கூறினேன். ஆனால் இதை பொதுமக்களிடம் கூற எனக்குத் தைரியமில்லை. காரணம் நான் பிரதமரைக் கவிழ்க்க நினைப்பதாக மக்கள் அதைத் தவறாகப் புரிந்து கொள்வார்களோ என்று அஞ்சினேன். நமது கட்சி வலுவில்லாமல் இருக்கும் இந்நிலையில், நான் பிரதமருடன் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படுத்திக் கொள்ள விரும்பவில்லை” என்றும் மொகிதின் தெரிவித்துள்ளார்.