Home கலை உலகம் “நான் யாருக்கும் எதிரி இல்லை”- விஷால் பேச்சு!

“நான் யாருக்கும் எதிரி இல்லை”- விஷால் பேச்சு!

416
0
SHARE
Ad

visசென்னை, ஆகஸ்டு 3- “நான் யாருக்கும் எதிரி இல்லை; எங்கு தீங்கு நேர்ந்தாலும் எதிர்த்துப் போராடுவேன்”என விஷால் கூறியுள்ளார்.

சென்ற வாரம் ஜூலை 27-ஆம் தேதி கோவையில்  கால்நடைப் பராமரிப்பு நல அறக்கட்டளையின் சார்பில் நடைபெற்ற ‘மாடுகள் வதைக்கு’ எதிரான பிரசாரக் கூட்டத்தில் விஷால் கலந்து கொள்ள வந்த போது அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்துச் சமூக நீதி இயக்கம் மற்றும் தலித் விடுதலைக் கட்சியைச் சேர்ந்தவர்கள் கருப்புக் கொடி காட்டினர்.

அடிமாடுகளாகப் பல மாடுகள் கனரக வாகனங்களில் துன்புறுத்தி ஏற்றப்பட்டு, கேரளா முதலிய மாநிலங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டுக் கொன்று இறைச்சியாக்கப்படுகின்றன. இந்தக் கொடுமையை எதிர்த்து நடிகர் விஷால் குரல் கொடுத்தார். இதன் காரணமாக அவருக்கு எதிர்ப்பு கிளம்பியது.

#TamilSchoolmychoice

இதனால்,‘‘வாயில்லாத ஜீவன்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தேன்.அதற்காக நான் கேரளாவுக்கு எதிரி அல்ல’’ என்று நடிகர் விஷால் கூறியுள்ளார்.

நடிகர்விஷால்-காஜல் அகர்வால் நடித்துள்ள ‘பாயும் புலி’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று நடந்தது. அவ்விழாவில் நடிகர் விஷால் இதுகுறித்துப் பேசினார்.

“இப்பட விழாவிற்கு வரும் சிறப்பு விருந்தினர்களுக்குப் பூங்கொத்து கொடுக்க வேண்டாம்; பூங்கொத்து வாங்கச் செலவாகும் பணத்தை இரண்டு ஏழை மாணவிகளுக்குக் கல்விக்கான உதவித் தொகையாகக் கொடுக்கலாம் என்று சொன்னேன்.

அதை ஏற்று இவ்விழாவில் கல்வி உதவித்தொகை வழங்கினார்கள். இதை வைத்து என்னைச் சிறப்பு விருந்தினரை வரவேற்க மனம் இல்லாதவன், பூங்கொத்துத் தயாரிப்பவர்களுக்கு எதிரானவன் என்று சொல்லிவிட வேண்டாம்.

நான் தெரு நாய்கள் கொல்லப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தேன்; வாயில்லாத ஜீவன்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தேன்; ஆடு மாடுகளைக் கொன்று குவிப்பதை எதிர்த்துப் பிரசாரம் செய்தேன்.உடனே,  நான் கேரளாவுக்கு எதிரி என்பது போல் சித்தரித்து விட்டார்கள். நான் கேரளாவுக்கு எதிரி இல்லை.

அப்படித்தான் என் தொழிலாகிய சினிமாத் தொழிலுக்குப் பாதிப்பு ஏற்பட்டதால் திருட்டுக் குறுந்தகடுகளுக்கு எதிராகப் போராடினேன். அதையும் அரசியல் ஆக்கிவிட்டார்கள். எனக்கு அரசியல்மீது நாட்டம் இல்லை. அதே போல் வெற்று விளம்பரம் தேட ஆசைப்படுபவன் நான் இல்லை” என விஷால் பேசினார்.