Home உலகம் இலங்கை மன்னார் பகுதியில் மிகப் பெரிய மனிதப் புதைகுழி கண்டுபிடிப்பு!

இலங்கை மன்னார் பகுதியில் மிகப் பெரிய மனிதப் புதைகுழி கண்டுபிடிப்பு!

501
0
SHARE
Ad

skeletonமன்னார் – திருக்கேதீஸ்வரம் பகுதியில் மேலும் ஒரு மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியில் மனிதர்கள் யாரும் நடமாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் திருக்கேதீஸ்வரம் பகுதியில் நீர்க்குழாய்களைப் பதிப்பதற்காகக் குழிகள் தோண்டிய போது, மனித எலும்புக் கூடு சிக்கியது.

அதனைத் தொடர்ந்து நீதிமன்ற அனுமதி பெற்று அந்தப் பகுதியில் தொடர்ந்து தோண்டிய போது, பெரிய அளவில் மனிதப் புதை குழி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

அந்தக் குழிக்குள் இருந்து 80 க்கும் அதிகமான மனித எலும்புக் கூடுகள் கண்டெடுக்கப்பட்டன. இந்த மனித எச்சங்கள் தற்போது அனுராதபுரம் வைத்தியசாலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இத்தனை பேரையும் ஒரே இடத்தில் புதைத்தது யார்? எப்போது புதைத்தார்கள்? இறந்து போனவர்கள் யார் யார்? என்கிற மர்மம் விலகாமல், இது தொடர்பான புலனாய்வும் விசாரணைகளும் நடந்து வருகின்றன.

இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கான இடமாக அது முன்னர் இருந்ததாகப் புலனாய்வுத்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

ஆனால், காணாமல் போனவர்களின் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர்கள், அங்கு அவ்வாறு இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கான இடம் இருந்திருக்க வாய்ப்பில்லை என்றும், அதற்கான பதிவுகளோ ஆவணங்களோ கிடையாது என்றும் வாதிட்டனர்.

அந்த இடத்தை இன்னும் நன்றாக ஆராய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். புதர்கள் மண்டிக் கிடந்த அந்தப் பகுதியைச் சுத்தப்படுத்தித் தோண்டிப் பார்த்ததில் மரணப் புதை குழிக்கு அருகே மிகப் பெரிய கிணறு ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்தக் கிணறு ஆழமாக இருப்பதால் அதற்குள் ஏதேனும் மனித எச்சங்கள் உள்ளனவா என்று ஆராய்ந்து பார்க்கவுள்ளனர்.

இதனையடுத்து அந்தப் பகுதியில் உள்ள தடயங்களைப் பாதுகாப்பதற்காக அந்தப் பகுதியைப் பயன்படுத்துவதைத் தடுத்து நிறுத்தும்படி காவல் துறையினருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.