Home Featured கலையுலகம் “வரி ஏய்ப்பு செய்தேன் என்ற செய்தியால் வேதனை அடைந்தேன்” – விஜய்

“வரி ஏய்ப்பு செய்தேன் என்ற செய்தியால் வேதனை அடைந்தேன்” – விஜய்

481
0
SHARE
Ad

vijay,சென்னை – புலி படம் வெளியாவதற்கு முதல் நாள், நடிகர் விஜய் மற்றும் அவரது படக்குழுவினரின் வீடுகளில் வருமான வரித்துறையினர் கடும் சோதனை நடத்தினர். இதனால் பல்வேறு சிக்கல்கள் உருவாகின. இந்நிலையில், நடிகர் விஜய் 25 கோடி ரூபாய் அளவிற்கு வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இது குறித்து மௌனம் காத்து வந்த விஜய், அதிகாரிகளின் சோதனைகள் முற்றிலுமாக முடிவடைந்துள்ள நிலையில் தனது விளக்கத்தை அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

“வருமான வரித்துறையினர் கலை உலகைச் சார்ந்த தயாரிப்பாளர்கள், நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோரின் அலுவலகங்கள் மற்றும் இல்லங்களில் சோதனையிடுவதும், தணிக்கை செய்வதும் இயல்பான ஒன்று. கடந்த வாரம் என்னுடைய இல்லத்திலும், அலுவலகத்திலும் வருமான வரித்துறையினர் நான் வருமான வரி ஏய்ப்பு ஏதும் செய்துள்ளேனா? என்று சோதனையிட்டார்கள்.”

#TamilSchoolmychoice

“நானும், எனது குடும்பத்தாரும், எனது அலுவலர்களும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்தோம். ஆனால் சில பத்திரிக்கைகளிலும், ஊடகங்களிலும் நான் கடந்த நான்கைந்து ஆண்டுகளாக வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்று உண்மைக்கு புறம்பான செய்தியை கூறியுள்ளதை அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். மேற்படி செய்தியில் சிறிதளவும் உண்மையில்லை.”

“நான் சட்டத்தை மதித்து நடப்பவன். என்றும் சட்டத்துக்கு மரியாதை கொடுப்பவன். நடப்பு நிதியாண்டு வரை நான் என்னுடைய தொழில் மற்றும் வருமானம் சம்பந்தப்பட்ட கணக்கினை குறித்த நேரத்தில் உரிய வருமான வரி அலுவலகத்தில் தாக்கல் செய்து, அதற்குரிய வருமான வரியையும், சொத்து வரியையும், தொழில் வரியையும் முறையாக செலுத்தியுள்ளேன் என்பது நிதர்சனமான உண்மையாகும்.”

“மேலும் நான் எப்பொழுதும் வருமான வரித்துறைக்கு முழு ஒத்துழைப்பும் தருவேன். எனவே உண்மைக்கு புறம்பான தேவையற்ற வீண் கருத்துக்களை செய்தித்தாள்களிலோ, ஊடகங்களிலோ வெளியிட்டு என் மனதைப் புண்படுத்த வேண்டாம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, விஜய் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதில் அரசியல் தலையீடு இருந்ததாகவும் கூறப்படுகிறது.