Home Featured நாடு நஜிப்புக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்: எதிர்க்கட்சிகள் தாக்கல்!

நஜிப்புக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம்: எதிர்க்கட்சிகள் தாக்கல்!

699
0
SHARE
Ad

najibகோலாலம்பூர்- பிரதமர் நஜிப் துன் ரசாக் மீது எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. இதற்கான முன் அறிவிக்கையை (நோட்டீஸ்) பி.கே.ஆர் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹீ லோய் சியான் அளித்துள்ளார்.

1எம்டிபி முறைகேடு தொடர்பில் பிரதமர் நஜிப் உரிய விளக்கங்களைத் தரத் தவறிவிட்டதாக, பெட்டாலிங் ஜெயா செலாத்தான் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹீ லோய் சியான் குற்றம்சாட்டியுள்ளார்.

“உலக அரங்கில் மலேசியாவின் நற்பெயருக்கு பிரதமர் நஜிப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளார். இதன் காரணமாக முதலீட்டாளர்களுக்கு மலேசிய அரசு மீதான நம்பிக்கை குறைந்துவிட்டது. நாட்டில் பொருளாதார நிலைத்தன்மையற்ற சூழல் நிலவுவதுடன், பங்குச் சந்தையும் மலேசிய ரிங்கிட் மதிப்பும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது” என்று தான் சமர்ப்பித்திருக்கும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் ஹீ லோய் சியான் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

Hee-Loy-Sian -MP-PKRஹீ லோய் சியான்

ஆசிய நாணயச் சந்தையில் தற்போது மலேசிய ரிங்கிட் தான் மிக மோசமான நிலையில் உள்ளது. இந்த ஆண்டு தற்போது வரையில் ரிங்கிட்டின் மதிப்பு 17 விழுக்காடு அளவிற்கு குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் நஜீப்புக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற எதிர்க்கட்சிகளுக்கு மேலும் 25 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவே தேவை.

எனவே பிரதமருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது அம்னோவில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி பிரதமர் பதவியில் நீடித்து வரும் நஜிப், தனது அரசியல் வாழ்க்கையில் மிக முக்கியமான, கடுமையான சோதனையை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

ஆனால், முதல் கட்டமாக நாடாளுமன்ற அவைத் தலைவர் இந்தத் தீர்மானத்தை வாக்கெடுப்புக்கு அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் வாக்கெடுப்பு நடைபெறும். நஜிப்பின் பலமும் வெட்ட வெளிச்சமாகும்.

ஆனால், அவ்வாறு வாக்கெடுப்புக்கு, அவைத் தலைவர் அனுமதி தரமாட்டார் என்றே அம்னோவின் மூத்த தலைவர் துங்கு ரசாலி ஹம்சாவும் தெரிவித்திருக்கின்றார்.