புத்ராஜெயா : முன்னாள் மாமன்னர் தனக்கு வழங்கிய தண்டனைக் குறைப்பைத் தொடர்ந்து எஞ்சிய சிறைவாசக் காலத்தை வீட்டிலேயே கழிக்கும் உத்தரவு சேர்க்கையை மறைத்ததற்காக, முன்னாள் சட்டத்துறைத் தலைவர் டான்ஸ்ரீ அகமட் தெரிருடின் முகமட் சாலே மீது நஜிப் துன் ரசாக் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்திருக்கிறார்.
இதனை நஜிப்பின் வழக்கறிஞர் டான்ஸ்ரீ ஷாபி அப்துல்லா உறுதிப்படுத்தினார்.
அகமட் தெரிருடின் தற்போது கூட்டரசு மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக செயல்பட்டு வருகிறார்.
தெரிருடின் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பான ஆவணங்கள் தயாராக இருப்பதாகவும் அடுத்த இரண்டு நாட்களுக்குள் அவை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் ஷாபி அப்துல்லா தெரிவித்தார்.
இதன் தொடர்பில் பிரதமர் அன்வார் இப்ராகிமின் அறிக்கையை தங்கள் வழக்குக்கு ஆதாரமாக ஷாபி அப்துல்லா மேற்கோள் காட்டியிருக்கிறார்.
கடந்த ஜனவரி 11-இல் வெளியிட்ட அறிக்கையில் சட்டத்துறைத் தலைவர் மாமன்னரின் உத்தரவு சேர்க்கையைப் பெற்றதாகவும் ஆனால் அதற்குள் புதிய மாமன்னர் பதவியேற்று விட்டதால் அவரின் பார்வைக்கு அந்த உத்தரவு சேர்க்கை அனுப்பப்பட்டதாகவும் அன்வார் கூறியிருந்தார்.
இதற்கிடையில், அரசாங்கத்தின் சார்பில் நஜிப்பின் வீட்டுக் காவல் விவகாரம் தொடர்பில் விவாதிக்க தடைவிதிக்க வேண்டும் என்ற மனுவும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவுக்கு எதிராகவும் நஜிப் வழக்கு தொடுத்திருக்கிறார்.