Home Featured நாடு நரேந்திர மோடி மலேசிய வருகை – உடன் செல்லும் அமைச்சராக டாக்டர் சுப்ரா நியமனம்!

நரேந்திர மோடி மலேசிய வருகை – உடன் செல்லும் அமைச்சராக டாக்டர் சுப்ரா நியமனம்!

521
0
SHARE
Ad

modiகோலாலம்பூர் – எதிர்வரும் சனிக்கிழமை (23 நவம்பர் 2015)  காலை கோலாலம்பூர் வந்தடையும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மூன்று நாட்களுக்கு வரிசையாக பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றார். மோடி வருகையின் போது அவருடன் உடன் செல்லும் அமைச்சராக மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் மலேசிய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டுள்ளார்.

பொதுவாக, வெளிநாட்டு பிரதமர்களும், அதிபர்களும், ஒரு நாட்டுக்கு வருகை மேற்கொள்ளும்போது, அவருக்கு உடன் செல்லும் அமைச்சராக ஓர் அமைச்சர் அரசாங்கத்தால் நியமிக்கப்படுவார். அந்த வகையில்தான் மோடியின் மலேசிய வருகையின் போது அவருடன் உடன் செல்லும் அமைச்சராக டாக்டர் சுப்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.

டாக்டர் சுப்ராவுக்கு வழங்கப்பட்டிருக்கும் இந்தப் பணியின் வாயிலாக, மோடியுடன் நீண்ட நேரம் நெருங்கிப் பழகி கருத்துப் பரிமாற்றம் மேற்கொள்ளும் வாய்ப்பு டாக்டர் சுப்ராவுக்குக் கிடைக்கும். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, மலேசிய இந்தியர்களின் வாழ்க்கைச் சூழல்கள், மலேசிய நாட்டின் அரசியல் அமைப்பு முறை, மலேசிய இந்தியர்களின் அரசியல் நிலைமை, அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் போன்ற விவகாரங்களை பிரதமர் மோடியிடம் எடுத்துக் கூறி அவரால் விளக்க முடியும் என்பதுடன், இந்திய அரசாங்கத்தின் மூலமாக, மலேசிய இந்தியர்களுக்கான பொருளாதாரம், கல்வி , கலை, கலாச்சாரம், போன்ற துறைகளில் வாய்ப்புகளை பெருக்கிக் கொள்வதற்கான வழிமுறைகளையும் கலந்தாலோசிக்க முடியும்.

#TamilSchoolmychoice

மூன்று நாள் வருகையை முடித்துக் கொண்டு மோடி திங்கட்கிழமை மாலை அதிகாரபூர்வ வருகை மேற்கொண்டு மோடி சிங்கப்பூர் சென்றடைகின்றார்.