Home Featured கலையுலகம் 2015-ல் தமிழ் சினிமா கடந்து வந்த சர்ச்சைகள் ஒரு பார்வை!

2015-ல் தமிழ் சினிமா கடந்து வந்த சர்ச்சைகள் ஒரு பார்வை!

683
0
SHARE
Ad

சென்னை – இந்திய அளவில் பாலிவுட்டுக்கு அடுத்ததாக சிறந்து விளங்கும் கோலிவுட் சினிமா, பாலிவுட் போலவே சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இருக்காது. 2015-ம் வருடத்திலும் தமிழ் சினிமா நட்சத்திரங்கள் பல்வேறு சர்ச்சைகளைக் கடந்து வந்திருக்கின்றனர்.

1. பீப் போட்ட சிம்பு

simbu

#TamilSchoolmychoice

சிம்பு = சர்ச்சை என்று கூறும் அளவிற்கு, தமிழ் சினிமாவில் சர்ச்சைகளுடன் வளம் வந்த சிம்பு, இந்த வருடத்தின் இறுதியில் கிளப்பிய சர்ச்சை தான் இதுவரை அவர் சந்தித்த பிரச்சனைகளின் உச்சமாக இருக்க வேண்டும். பெண்களைக் கொச்சைப்படுத்தும் வகையில் பீப் பாடல் போட, ஜாமீனில் வெளிவர முடியாத அளவிற்கு மகளிர் சங்கம் வழக்கு போட்டது. அவரைப் பிடிக்க, காவல்துறை 5 தனிப்படை அமைத்தும், மனிதர் இன்னும் சிக்கவே இல்லை. பூதாகரமான இந்த பிரச்சனையில் அனிரூத்தும், சிவக்கார்த்திகேயனும் சிக்கியது தனிக்கதை.

2. நடிகர் சங்கத் தேர்தலா? பொதுத் தேர்தலா?

nadigar

நடிகர் சங்கத்தின் தேர்தலா? அல்லது பொதுத் தேர்தலா? என்று மக்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு சர்ச்சைகளுடனும், ரகளைகளுடனும் தேர்தல் நடந்து முடிந்தது. பழம் பெரும் நடிகர் சிவக்குமார் முதல் கமல்ஹாசன், விஷால் என ஒருவரையும் விட்டு வைக்காமல் ராதா ரவியும், சரத்குமாரின் திட்டித் தீர்க்க, பல நாட்களுக்கு அந்த காணொளி வாட்சாப், யூ-டியூப் என வளைய வந்தது.

3. உலக நாயகன் இழுத்த வம்பு

kamal-hassan

விஸ்வரூபம் சந்தித்த பிரச்சனைக்குப் பின்னர், நடப்பு அரசியலைப் புரிந்து கொண்டு அமைதி காத்த கமல்ஹாசன், சென்னை வெள்ளத்தில், மழையுடன் சேர்ந்து அவரும் பொங்கிவிட்டார். அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக அறிக்கை வெளியிட, கொதித்தெழுந்த அமைச்சர் ஓபிஎஸ், கேட்க வேண்டியவர்களிடம் அனுமதி பெற்று, வெளியிட்ட ‘பதிலடி அறிக்கை’ பல பக்கங்களைத் தாண்டியது. கடைசியில், ‘நான் அறிக்கையே வெளியிடல..ஆள விடுங்க’ என்று தப்பித்தார்? உலக நாயகன். தப்பித்தாரா? என்பது அடுத்த படம் வரும் போது தெரியும்.

4. பத்திரிக்கையாளரைப் போட்டுத் தாக்கிய இசை ஞானி

ilaiyaraj

நிவாரண பணிகளுக்கான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இளையராஜாவிடம்,  சிம்புவின் பீப் பாடல் குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்ப, கொந்தளித்த இசை ஞானி, “உனக்கு அறிவிருக்கா?. என்கிட்ட கேக்க உனக்கு என்ன தகுதி இருக்கு” என்கிற ரீதியில் வாக்குவாதத்தில் இறங்கிவிட்டார். ஒருவழியாக உடன் இருந்தவர்கள் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

5. கலாம் மறைந்த அன்று பிறந்தநாள் கொண்டாடிய தனுஷ்

dhanush

நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் மறைவு, ஒரு கணம் ஒட்டுமொத்த இந்தியாவையும் ஸ்தம்பிக்க வைத்தது. அவர் மறைந்து முழுசாக ஒரு நாள் கூட ஆகாத நிலையில், டுவிட்டரில் அஞ்சலி செலுத்திவிட்டு நட்சத்திர விடுதி ஒன்றில், தனது மனைவி ஐஸ்வர்யா மற்றும் பல நட்சத்திரங்களுடன் தனது பிறந்த நாளை, தனுஷ் விமர்சையாகக் கொண்டாட, கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

6. ரஜினியை விடாது விரட்டிய ராம் கோபால் வர்மா

Ram-Gopal-Varma2

சென்னை வெள்ளத்திற்கு தெலுங்கு நடிகர்கள் கூட கோடிக் கணக்கில் நிவாரண நிதி வழங்க, ரஜினி வழங்கிய 10 லட்சம் ரூபாய் பல்வேறு தரப்பினரிடத்திலும் முணுமுணுப்பை ஏற்படுத்தியது. ஆனால் பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா, “ரஜினி கொடுத்த அவ்வளவு பெரியத் தொகையை வைத்துக் கொண்டு, சென்னை மக்கள் செய்வது அறியாமல் திகைத்து நிற்கின்றனர். இந்த தொகை கொடுத்ததற்கு ரஜினி கொடுக்காமலே இருந்திருக்கலாம்” என்று டுவிட்ட, அடுத்த சில நாட்களுக்கு ஊடகங்கள் பற்றி எரிந்தன.

7. ஹன்சிகாவின் ஆபாசக் காணொளி

hansika-hot1

பிரபல நடிகை ஹன்சிகாவின் குளியல் அறைக் காணொளி இணைய தளங்களில் வெளியாக, அந்த அதிர்ச்சியில் இருந்து மீள, ஹன்சிகாவிற்கு பல நாட்கள் பிடித்தது. அந்த கேள்வியை தவிர்ப்பதற்காகவே பல நாட்கள் ஊடகப் பேட்டிகளைத் தவிர்த்து வந்தார். அப்படியும் ஒரு நாள், அந்த கேள்வியை செய்தியாளர் கேட்க, “எங்களை இழிவுபடுத்துவதற்கு எப்படி மனது வருகிறது என்று புரியவில்லை. இப்படிப்பட்ட ஆபாச காணொளியை வெளியிடுவது  கற்பழிப்பை விட கொடுமையானது” என்று கதறினார்.

ஹன்சிகா மட்டுமல்லாது கபாலி படத்தில் ரஜினியுடன் நடித்து வரும் ராதிகா ஆப்தே, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் நடிகை ஸ்ரீ திவ்யா உள்ளிட்ட நடிகைகளும் ஆபாசக் காணொளிப் பிரச்சனையில் சிக்கித் தவித்தனர்.

8. வடிவேலு மீண்டும் வெடி வேலானார்

vadivelu

2011 தேர்தல் சூறாவளியில் சிக்கி, இரண்டு வருடங்கள் காணாமல் போயிருந்த வடிவேலு, மெல்ல எழுந்து மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கினார். என்றாலும், ‘நடிச்சா ஹீரோ தான் சார்’ என்று கூறி, அவர் நடித்த இரண்டு படங்களும் காலை வார, இன்றும் அடுத்த வாய்ப்பிற்கு காத்திருக்கிறார். என்றாலும் விடாத வடிவேலு, நடிகர் சங்கத் தேர்தலுக்காக இம்முறையும் மைக் பிடித்தார். ராதாரவிக்கு போட்டியாக விஷால் அணியால் களமிறக்கப்பட்ட வடிவேலு வெடித்துச் சிதறினார்.

9. புலி தயாரிப்பாளர்களை நோகடித்த ஸ்ரீதேவி

sridevi-puli

மிக நீண்ட வருடங்களுக்குப் பிறகு, ‘புலி’ படத் தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாவிற்கு ஸ்ரீதேவியை அழைத்து வந்தனர். விஜய், ஸ்ரீதேவி, சுதீப், ஸ்ருதி என நட்சத்திரப் பட்டாளங்கள் நடித்த புலி, பாக்ஸ் ஆபிசில் உறுமாமல் ‘மியாவ்’ என்று தான் கத்தியது. நஷ்டத்தை வெளியில் சொல்லாமல் தயாரிப்பாளர்கள் அமைதி காத்து வந்தாலும், சம்பளம் பாக்கி இருப்பதாக ஸ்ரீதேவி தரப்பு தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுக்க, நொந்து போன அவர்கள், படத்தில் அரசியாக நடித்த ஸ்ரீதேவி, படப்பிடிப்பில் நடத்திய ராஜாங்கத்தை போட்டுடைத்தனர்.

10. திரிஷா இல்லனா நயன்தாரா என மாறி மாறி பயணித்த சர்ச்சை

trisha-with-varun-600

முன்னணி நடிகைகளான திரிஷாவும், நயன்தாராவும், மாறி மாறி சர்ச்சைகளில் சிக்கினர். திரிஷாவுக்கும் தொழிலதிபர் வருண் மணியனுக்கும் கோலாகலமாக நடந்த திருமண நிச்சயதார்த்தம், ஏனோ திருமணம் வரை செல்லாமல் நின்று போனாது. விடாமல் துரத்தி திரிஷாவிடம் பத்திரிக்கையாளர்கள் காரணம் கேட்க, “எல்லாம் கடவுள் செயல்” என வானத்தைக் காட்டினார்.

vighnesh-nayan-selfieநயன்தாராவிற்கும் சர்ச்சைகளுக்கும் ஏகப் பொருத்தம். சிம்பு, பிரபுதேவா, ஆர்யா என நயன்தாராவின் காதலர்கள் பட்டியல் ஊடகங்களில் நீள, தற்போது அந்தப் பட்டியலில் கடைசியாக இடம் பெற்று இருப்பவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். அதற்கு ஆதாரமாக அவர்களின் செல்பி (தம்படம்) இணையங்களில் சுழன்றடித்தது.

– சுரேஷ் சிவசங்கரன்