மாங்கல்யம் அணிவித்தலை தொடர்ந்து, மலர் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. அதன் பின்னர் தீபாராதனை, அர்ச்சனை, ரட்சை சாற்றுதல், 16 வகை உபசாரம், வேதபாராயணம், வேத மந்திரங்கள் முழங்க திருமுறை பாராயணம், வாத்திய கோஷம் முழங்க தீபாராதனை நடந்தது.
இதற்காக இன்று அதிகாலை 5 மணிக்கு வள்ளி, தெய்வானையுடன் முத்துக்குமாரசுவாமி தோளுக்கினியான் வாகனத்தில் எழுந்தருளி, சண்முகநதியில் தீர்த்தம் வழங்கும் நிகழ்ச்சியும், 11 மணிக்கு மேஷ லக்னத்தில் திருத்தேரேற்றமும் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, மாலை 4.25 மணிக்கு, தைப்பூசத் திருத்தேரோட்டம் நடைபெற இருக்கிறது. இரவு 7.30 மணிக்கு, தந்தப்பல்லக்கில் தேர்பார்த்தல் நிகழ்ச்சியும் நடைபெறும் எனத் தெரிய வருகிறது.
பழனியில் தைப்பூசத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து இருப்பதால், பாதுகாப்பு கருதி 3000 காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், பழனி மலையைச் சுற்றி, ஆளில்லா விமானங்கள் மூலமும் கண்காணிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.