மதுரை: தமிழ் நாடு அரசியலில் திமுக, அதிமுக போன்ற கட்சிகள் அவ்வப்போது நடத்தும் பிரம்மாண்டமான மாநாடுகள் தேர்தல் முடிவுகளை – அந்த மாநிலத்தின் அரசியல் போக்குகளை – நிர்ணயிக்கும் – மாற்றியமைக்கும்!
ஆனால், ஒரு வித்தியாசமாக மதுரையில் கடந்த ஜூன் 22-ஆம் நாள் இந்து முன்னணியால் நடத்தப்பட்ட முருக பக்தர்கள் மாநாடும் அதைத் தொடர்ந்த சர்ச்சைகளும் தமிழ்நாட்டில் பேசு பொருளாகியிருக்கின்றன.
குறிப்பாக, எந்தவித முன்னேற்பாடுகளும், கவர்ச்சியாக ஈர்ப்புகளும் இன்றி 5 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் ஒழுங்குடனும் கட்டுப்பாடுடனும் முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்பட்டிருக்கிறது. பாஜக தலைவர்கள் இந்த மாநாட்டில் உரையாற்றியிருக்கின்றனர். அதிமுக தலைவர்களும் கலந்து கொண்டனர்.
திமுக கூட்டணி தரப்பில் இந்த மாநாடு சலசலப்பையும், பதற்றத்தையும் உருவாக்கியிருக்கிறது என்பது அடுத்தடுத்து அரங்கேறி வரும் காட்சிகள் எடுத்துக் காட்டுகின்றன. மாநாட்டைப் பயன்படுத்தி அதிமுகவுக்கு எதிரான கருத்துகளை திமுக தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்துக்கொண்ட ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண், ஆற்றிய உரையும் சர்ச்சையாகியிருக்கிறது. அமைதியை சீர்குலைக்கும் வகையில் அவர் பேசியதாகவும் அவரை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பினர், மதுரை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.
மாநாட்டில் உரையாற்றிய பாஜக தலைவர்களும் மத வெறியைத் தூண்டும் விதத்தில் பேசியதாக எதிர்ப்புகள், கண்டனக் குரல்கள் எழுந்து வருகின்றன. காவல் துறை புகார்கள் செய்யப்பட்டுள்ளன.
அடுத்த ஆண்டு மே மாதத்தில் தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மதுரை முருக பக்தர்கள் மாநாடு தமிழ் நாடு அரசியலில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்து வரும் மாதங்களில் இதன் அரசியல் தாக்கங்கள் வெளிச்சத்துக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.