Home Featured நாடு மஇகாவுக்கு எதிரான பழனிவேல் தரப்பினரின் வழக்கு தொடங்குகின்றது!

மஇகாவுக்கு எதிரான பழனிவேல் தரப்பினரின் வழக்கு தொடங்குகின்றது!

447
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மஇகாவுக்கு எதிராக அந்தக் கட்சியின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பினர் தொடுத்துள்ள வழக்கு இன்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Subra-Palanivel“கேஸ் மேனேஜ்மெண்ட்” (வழக்கு நிர்வாகம்) எனப்படும் வழக்கின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முடிவு செய்வதற்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று நாள் குறித்துள்ளதாக அந்த வழக்கைத் தொடுத்திருப்பவர்களில் ஒருவரான ஏ.கே.இராமலிங்கம் தெரிவித்ததாக தகவல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மஇகாவுக்கு மறுதேர்தல் நடத்தும் விவகாரத்தில் சங்கப் பதிவகத்தின் முடிவுகள் மற்றும் கடிதங்கள் தொடர்பில் எழுந்த சர்ச்சைகளைத் தொடர்ந்து பழனிவேல் ஆதரவாளர்கள் சிலர் இந்த வழக்கைத் தொடுத்துள்ளனர்.

#TamilSchoolmychoice

மஇகாவுக்கு எதிராக வழக்கு தொடுத்த காரணத்தால், தனது கட்சி உறுப்பினர் பதவியை இழந்த பழனிவேல், அதன் காரணமாக மஇகாவின் தேசியத் தலைவர் பதவியையும் இழந்தார். தான் இன்னும் மஇகாவின் அதிகாரபூர்வ தேசியத் தலைவர் எனக் கூறிவரும் பழனிவேல், இந்த வழக்கை நேரடியாகத் தாக்கல் செய்யவில்லை.

இருப்பினும் அவரது நெருக்கமான ஆதரவாளர்கள் இந்த வழக்கைத் தொடர்ந்திருப்பதன் மூலம், சங்கப் பதிவுகளின் முடிவுகளை மாற்றியமைத்து, அதன் மூலம், மீண்டும் மஇகாவைக் கைப்பற்ற முடியும் என்ற நம்பிக்கையைக் கொண்டிருக்கின்றார்கள்.

மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம், உதவித் தலைவர்கள் டத்தோ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், டத்தோ ஜஸ்பால் சிங், டத்தோ டி.மோகன், தலைமைச் செயலாளர் அ.சக்திவேல்,வழக்கறிஞர் ஆர்.வசந்தி, சங்கப் பதிவகத்தின் அதிகாரிகள் ஆகியோர் பிரதிவாதிகளாகப் பெயர் குறிப்பிடப்பட்டு இந்த வழக்கு தொடுக்கப்பட்டிருக்கின்றது.

மஇகாவுக்கு எதிரான பழனிவேல் தரப்பினரின் நீதிமன்ற முயற்சிகளில் இறுதிக் கட்டப் போராட்டமாக இந்த வழக்கு பார்க்கப்படுகின்றது.