சென்னை – இலங்கை, நாவலர் அமிர்தலிங்கம் அவர்களின் துணைவியார் திருமதி மங்கையற்கரசி (படம்) புதன்கிழமை மார்ச் 9ஆம் தேதி இலண்டனில் காலமானார். அவரது மறைவுக்கு திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.
“கணவரும் மனைவியுமாக அந்தக் காலத்தில் என்னைச் சந்தித்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதெல்லாம் நினைவுக்கு வந்தது. நாவலர் அமிர்தலிங்கம் இலங்கையில் கொல்லப்பட்ட பிறகு, அம்மையார் அந்த நாட்டிலிருந்தே வெளியேறி தமிழகத்திலும், லண்டனிலும் வாழ்ந்து வந்தார். தமிழகத்திற்கு வரும்போதெல்லாம் என்னைச் சந்தித்து உடல் நலம் விசாரித்துச் செல்வார். அம்மையாரின் மறைவுக்காக அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், இலங்கைத் தமிழர்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும் கலைஞர் மேலும் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.