Home Featured இந்தியா வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மையம் புதுடில்லியில் மோடி திறந்து வைக்கின்றார்! இணையத்தில் நேரடி ஒளிபரப்பு!

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மையம் புதுடில்லியில் மோடி திறந்து வைக்கின்றார்! இணையத்தில் நேரடி ஒளிபரப்பு!

973
0
SHARE
Ad

Narendra Modi

புதுடில்லி – காந்தி பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இன்று ஞாயிற்றுக்கிழமை புதுடில்லியில் உள்ள தூதரக வளாகமான சாணக்கியபுரியில் “பிரவாசி பாரதிய கேந்திரா” என்ற புதிய மையத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து அதனை வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக சமர்ப்பணம் செய்கின்றார்.

பிரவாசி பாரதிய கேந்திரா பல்வேறு வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் சிறப்புமிக்க, வளமான கலாச்சார பாரம்பரியத்தைக் காட்டும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு அதிநவீன மாநாட்டு மண்டபம் ஒன்றும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

மாநாடுகள், கருத்தரங்குகள், வகுப்புகள், கலாச்சார நிகழ்ச்சிகள் ஆகியவற்றை நடத்துவதற்கான வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த மையம்  வெளிநாட்டு இந்தியர்களுக்கான கருத்துப் பரிமாற்றங்கள் நிகழும் களமாகவும் செயல்படும்.

indian-high-commission-எதிர்காலத்தில் வெளிநாட்டு இந்தியர்களின் அனைத்து நடவடிக்கைகளையும், ஒருங்கிணைக்கும், ஒருமுகப்படுத்தும் மையமாகவும் அவர்களை ஒன்று சேர்க்கும் தளமாகவும் பிரவாசி பாரதிய கேந்திரா உருவாக்கப்படும்.

கடந்த காலங்களில் வெளிநாடுகளுக்கு குடியேறிய இந்தியர்களின் வரலாற்றை எடுத்துக் காட்டும் வண்ணம், பதிவு செய்யும் வகையிலான, எழுத்தோவியங்கள், நூல்கள், பத்திரிக்கைள், ஒலி, ஒளி வடிவிலான கோப்புகள் ஆகியவற்றைக் கொண்ட நூல் நிலையம் ஒன்று இங்கு அமைக்கப்படவுள்ளது என்பதோடு, இன்றைய காலகட்டத்தில் தங்களின் தாய்நாடான இந்தியாவுடன் அயல்நாட்டு இந்தியர்கள் கொண்டிருக்கும் தொப்புள் கொடி உறவுகள் குறித்த நடப்பு பதிவுகளையும் அந்த மையம் கொண்டிருக்கும்.

வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் நூல்களும், எழுத்துப் படிவங்களும் இந்த மையத்தில் இடம் பெற்றிருக்கும்.

வெளிநாட்டு வாழ் இந்தியராக தென் ஆப்பிரிக்கா சென்று, பின்பு நாடு திரும்பி தாய்நாட்டுக்கு சுதந்திரம் வாங்கித் தந்த அண்ணல் மகாத்மா காந்தியின் பிறந்த நாளான இன்று, அவரைச் சிறப்பிக்கும் விதமாக இந்த மையத்தை நரேந்திர மோடி திறந்து வைக்கும் நிகழ்ச்சி, இன்று ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 2) இந்திய நேரப்படி காலை 11.30 முதல் நண்பகல் 12.30 வரை (மலேசிய நேரப்படி பிற்பகல் 2.00 மணி முதல் 3.00 மணிவரை) நடைபெறுகின்றது.

இந்நிகழ்ச்சியைக் காண விரும்புபவர்களுக்காக, கோலாலம்பூரிலுள்ள இந்தியத் தூதரகம் இந்த நிகழ்ச்சியை நேரலையாக கீழ்க்காணும் தனது இணையத் தளத்தின் வழி ஒளிபரப்புகின்றது.

http://www.indianhighcommission.com.my