Home Featured இந்தியா வாசனைத் திரவிய ஆராய்ச்சியாளர் மோனிகா கொலை – முன்னாள் காவலாளி கைது!

வாசனைத் திரவிய ஆராய்ச்சியாளர் மோனிகா கொலை – முன்னாள் காவலாளி கைது!

581
0
SHARE
Ad

பானாஜி – இந்தியாவின் பிரபல வாசனைத் திரவிய ஆராய்ச்சியாளரும், ஆடை அலங்கார வடிவமைப்பாளருமான மோனிகா குர்தே (வயது 39), கடந்த அக்டோபர் 7-ம் தேதி, கோவாவிலுள்ள தனது அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டில் நிர்வாணமாக கை, கால்கள் கட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

அவரது கொலைக்கான காரணத்தையும், கொலையாளியையும் கண்டறிய கோவா காவல்துறை நடத்திய அதிரடி விசாரணையில், அவர் தங்கிகியிருந்த அடுக்குமாடிக் குடியிருப்பின் முன்னாள் காவலாளி ராஜ்குமார் சிங் என்பவரை பெங்களூரில் வைத்து சில தினங்களுக்கு முன்பு காவல்துறை கைது செய்தது.

monicaஇந்நிலையில், ராஜ்குமார் சிங்கிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மோனிகா குர்தேவை நிர்வாணப்படுத்தி தான் படமெடுக்க முயன்றதாகவும், பின்னர் அந்த காணொளியை வைத்து அவரை மிரட்ட நினைத்தாகவும் தெரிவித்துள்ளதாக கோவா காவல்துறை தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

மேலும், சம்பவத்தின் போது மோனிகாவை அந்நபர் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தினாரா? என்பதையும் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றது.

இது குறித்து விசாரணை அதிகாரிகளில் ஒருவர் ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ இணையதளத்திடம் கூறுகையில், மோனிகாவை கட்டி வைத்து மூச்சுத் திணறச் செய்ததில் அவர் மயக்க நிலைக்குச் சென்றுவிட்டார் என்று தான் நினைத்ததாக ராஜ்குமார் சிங் தெரிவித்தான். மேலும் மோனிகா குர்தேவை அவன் படமெடுத்தானா? என்பதும் இன்னும் உறுதியாகத் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

ராஜ்குமார் சிங் காவல்துறையிடம் கூறிய தகவலின் படி, அவரை மூச்சுத்திணறச் செய்துவிட்டு, சமையலறைக்குச் சென்ற அவன், அங்கிருந்த இரண்டு முட்டைகளைச் சாப்பிட்டிருக்கிறான். அதுவரையில் மோனிகா இறந்துவிட்டதை அறியாத அவன், மயக்க நிலையிலேயே இருக்கிறார் என்று நினைத்திருக்கிறான். பின்னர் அருகே சென்று சோதித்துப் பார்த்த போது அவர் இறந்து போனதை உணர்ந்தவுடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளான்.

பெங்களூரில் கைது

மோனிகாவின் செல்பேசி, வங்கி அட்டை உள்ளிட்டவைகளை திருடிச் சென்ற ராஜ்குமார் சிங், பெங்களூருக்குத் தப்பிச் சென்றுள்ளான். அங்கு மோனிகாவை செல்பேசியையும், வங்கி அட்டையையும் பயன்படுத்திய போது காவல்துறையிடம் வசமாகச் சிக்கிக் கொண்டான்.

பிரேதப் பரிசோதனை

இதனிடையே, கடந்த சனிக்கிழமை மோனிகா குர்தேவின் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவர் மூச்சுத் திணறி இறந்திருப்பதும், அவரது பெண்ணுறுப்பில் காயங்கள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.