Home Featured நாடு “இயேசுவின் போதனைகளைப் பின்பற்றுவோம்” – சுப்ரா கிறிஸ்துமஸ் வாழ்த்து

“இயேசுவின் போதனைகளைப் பின்பற்றுவோம்” – சுப்ரா கிறிஸ்துமஸ் வாழ்த்து

836
0
SHARE
Ad

subra-christmas-message-photoகோலாலம்பூர் – அமைதிக்காகப் போராடுபவர்களை நேசியுங்கள் என்ற அற்புத வாசகத்தை அருளி, எதிரியையும் நேசித்து, அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்தவர் இறைத் தூதர் இயேசு பிரான் – அவரின் பிறந்த நாளையே கிருஸ்துமஸ் நாளாக உலகத்திலுள்ள அனைத்துக் கிருஸ்துவ பெருமக்களும் கொண்டாடி மகிழும் வேளையில்,  அனைத்து மலேசிய வாழ் கிருஸ்துவர்களுக்கும் எனது மனமார்ந்த கிருஸ்துவ பெருவிழா வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தனது கிருஸ்மஸ் செய்தியில் தெரிவித்துள்ளார்.

“மனிதக் குலத்திற்குத் தொண்டு செய்வதற்காக இறைத்தூதராக அவதரித்தவர் இயேசு பெருமகனார். பூமியில் மனிதநேயம் தழைத்திடவும், பிறரை நேசிக்கவும், எதிரிகளிடம் அன்பு செலுத்தவும், நம்மை வெறுப்பவருக்கு உதவி செய்திடவும், அவமதிப்பவர்களைக் கூட அரவணைத்திடவும்  வேண்டும் என உன்னதமான அற்புத குணங்களைப் போதித்தவர் இயேசு பிரான். குறிப்பாக அண்மையக் காலமாக உலகின் பல பகுதிகளில் நிகழ்ந்து வரும் மனிதாபிமானமற்ற பயங்கரவாதத் தாக்குதல்கள், அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் ஆகியவற்றைப் பார்க்கும்போது, இயேசுநாதரின் போதனைகளும், அவரின் அணுகுமுறைகளும் இன்றைக்கும் எந்த அளவுக்கு நமக்குத் தேவை, எந்த அளவுக்கு தற்போதைய நடைமுறை வாழ்க்கைக்கு அவை பயன்படத்தக்கவை என்பது நமக்குப் புலனாகின்றது” என்றும் டாக்டர் சுப்ரா தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

“உலகம் எங்கும் பயங்கரவாத நடவடிக்கைகளும், தாக்குதல்களும் அதிகரித்து வரும் இவ்வேளையில், இந்தக் கிருஸ்துமஸ் திருநாளில் இயேசுநாதரின் போதனைகளையும், கருத்துகளையும் நாம் நினைவுபடுத்திக் கொள்வதும், அதன்படி நடக்க முற்படுவதும் சிறந்த செயல்களாக இருக்க முடியும்” என்றும் கூறியுள்ள சுப்ரா அதே வேளையில் “கிருஸ்துமஸ் திருநாளைக் கொண்டாடும் இந்நாளில், மக்கள் அனைவரும் தங்களது உணவுப் பழக்க முறையில் கவனம் செலுத்தி உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதையும் மறந்து விடக் கூடாது. ஆரோக்கியமான முறையில் கிருஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடும் கலாச்சாரம் அனைவரிடத்திலும்  மேலோங்க வேண்டும்” என்றும் தனது கிருஸ்மஸ் செய்தியில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“அன்பே வாழ்வின் மையம் எனும் போதனையைச் சொல்வது கிருத்துவம். எதிர்பார்ப்புகள் இல்லாமல் வழங்கப்படும் அன்பு இறைவனுக்குச் சமமானது. அத்தகைய அன்பு இருப்பின் உலகில் பிரச்சனையே இருக்காது. அந்தத் தன்மைகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். “நாம் மற்றவரிடம் எதை எதிர்பார்க்கிறோமா, அதனையே மற்றவர்களும் நம்மிடமிருந்தும் எதிர்பார்ப்பார்கள்” என்ற கருப்பொருளை உணர்ந்து, அனைவரையும் சமமாக வழிநடத்தி அன்பு செலுத்திட வேண்டும் என்றும் இந்த கிருஸ்மஸ் திருநாளில் கேட்டுக் கொள்கின்றேன். கிருஸ்தவ பெருமக்கள் அனைவருக்கும்  எனது இதயம் கனிந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு  முறை உரித்தாக்கிக் கொள்கின்றேன்” என சுப்ரா தனது கிருஸ்மஸ் தின வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.