குணசீலன் சிவக்குமார், ஸ்ரீகுமரன் முனுசாமி,ரேவதி மாரியப்பன், கபிலன் கணேசன், செல்வக்குமாரி செல்வராஜு, அகலியா மணியம் என 6 அறிவிப்பாளர்கள், விழுதுகள் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதற்காக புதிதாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.
அதேவேளையில், விழுதுகளில் இன்று வரை சிறப்பாக நிகழ்ச்சி படைத்து, அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வந்த சுரேஷ் திருஞானசம்பந்தன், சத்யாமுரசன் செங்கல்வராயன், நதியா ஜெயபாலன், இந்துமதி ஆகியோரும் மேடையில், விழுதுகள் குறித்த தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதோடு, புதிய அறிவிப்பாளர்களுக்குத் தங்களது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனர்.
6 புதிய அறிவிப்பாளர்கள் பற்றிய அறிமுகம்:
குணசீலன் சிவக்குமார்
விழுதுகள் அறிவிப்பாளராகத் தான் தேர்வு செய்யப்பட்டிருப்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், பெருமையையும் அளிப்பதாக குணசீலன் தெரிவித்தார்.
ஸ்ரீகுமரன் முனுசாமி
‘விழுதுகள்’ அறிவிப்பாளர் ஆக வேண்டும் என்ற தனது நீண்ட நாள் ஆசை தற்போது நிறைவேறியிருப்பதாக ஸ்ரீகுமரன் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
நல்ல தமிழில், அருமையான தகவல்களோடு இடம்பெறும் விழுதுகள் நிகழ்ச்சியில் தனது பங்களிப்பை சிறப்பாகச் செய்யவிருப்பதாகவும் ஸ்ரீகுமரன் குறிப்பிட்டார்.
ரேவதி மாரியப்பன்
விழுதுகளில் இணைந்திருப்பதில் மிகவும் மகிழ்ச்சி என்று கூறிய ரேவதி, பல நல்ல பயனுள்ள தகவல்களை மக்களுக்கு வழங்கவிருப்பதாகத் தெரிவித்தார்.
கபிலன் கணேசன்
360 பாகை நிகழ்ச்சி முன்பே பதிவு செய்யப்பட்டு ஒளிபரப்பப்படும் ஒரு நிகழ்ச்சி, ஆனால் விழுதுகளில் நேரலையில் பேசவிருப்பது தனக்குப் புதிய அனுபவத்தைக் கொடுக்கும் என்று கபில் தெரிவித்தார்.
செல்வக்குமாரி செல்வராஜு
கடந்த முறை விழுதுகள் அறிவிப்பாளருக்கான நேர்முகத் தேர்வு நடைபெற்ற போது, அதில் கலந்து கொண்ட செல்வக்குமாரிக்கு அப்போது வாய்ப்பு கிடைக்கவில்லை. என்றாலும் விடாமுயற்சியுடன் மீண்டும் தொடர்ந்து நேர்முகத் தேர்வுகளில் கலந்து கொண்டு இம்முறை விழுதுகள் அறிவிப்பாளராகும் வாய்ப்பினைப் பெற்றிருக்கிறார்.
இந்த வாய்ப்பை நிச்சயமாக சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ளவிருப்பதாக செல்வக்குமாரி தெரிவித்தார்.
அகலியா மணியம்
பிஎம்ஆர் தேர்வில் சிறப்புத் தேர்ச்சியடைந்த போது தனது புகைப்படம் வெளியிடப்பட்ட நாளிதழ், விழுதுகள் நிகழ்ச்சியில் காட்டப்பட்டதாகவும், இப்போது அதே நிகழ்ச்சிக்கு அறிவிப்பாளராகும் வாய்ப்பு தனக்குக் கிடைத்திருப்பது மிகவும் பெருமை என்றும் அகலியா மணியம் கூறினார்.
அகலியாவிற்கு இன்னொரு திறமையும் இருப்பது அண்மையில் திரைப்படம் ஒன்றின் மூலம் தெரிய வந்தது. இளம் இயக்குநர் கவி நந்தன் இயக்கத்தில் உருவான ‘வெண்பா’ என்ற திரைப்படத்தில் அகலியா கதாநாயகியாக நடித்திருந்தார். இளைஞர்கள் மத்தியில் அத்திரைப்படம் மிகவும் வரவேற்பினைப் பெற்றது. குறிப்பாக அகலியாவின் கதாப்பாத்திரம் பலராலும் ரசிக்கப் பட்டது.
இத்தனை சிறப்புகள் கொண்ட இந்த 6 புதிய அறிவிப்பாளர்களும், இனி அஸ்ட்ரோ தமிழ் அலைவரிசைகளில், ‘விழுதுகள்’ நிகழ்ச்சியின் மூலம் பல சுவையான தகவல்களை வழங்கி, நம்ம வீட்டுப் பிள்ளையாக இருக்கப் போகிறார்கள்.
அவர்களுக்கு ‘செல்லியல்’ சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
-செல்லியல் தொகுப்பு