Home Featured நாடு ஈஜோக் சட்டமன்றம் – மீண்டும் மஇகா போட்டியிடுகின்றது!

ஈஜோக் சட்டமன்றம் – மீண்டும் மஇகா போட்டியிடுகின்றது!

794
0
SHARE
Ad

kuala selangor-SITF- (3)

பத்தாங் பெர்ஜூந்தை – இன்னும் ஓராண்டு காலத்திற்குள் அடுத்த பொதுத் தேர்தல் எதிர்பார்க்கப்படும் வேளையில், மஇகா போட்டியிடக் கூடிய தொகுதிகள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.அந்த வகையில் சிலாங்கூர் மாநிலத்தில் மஇகா போட்டியிடும் என எதிர்பார்க்கப்படும் 3 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றான ஈஜோக்கில் மஇகாவே மீண்டும் போட்டியிடும் என மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் இன்று அறிவித்தார்.

கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் மீண்டும் மஇகா போட்டியிடும் என்பதை அண்மையில் அறிவித்த டாக்டர் சுப்ரா, தொடர்ந்து உலுசிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதியிலும் மஇகா போட்டியிடும் என அறிவித்திருந்தார்.

#TamilSchoolmychoice

kuala selangor-SITF- (12)கோலசிலாங்கூர் எஸ்.ஐ.டி.எப் மையத்தைத் திறந்து வைக்கும் டாக்டர் சுப்ரா…

இன்று ஞாயிற்றுக்கிழமை கோலசிலாங்கூர் நகருக்கு வருகை மேற்கொண்ட டாக்டர் சுப்ரா, பிரதமர் துறையின் கீழ் அமைந்துள்ள இந்தியர் விவகாரங்களுக்கான சிறப்பு அமைச்சரவைக் குழுவின் கீழ் செயல்படும் எஸ்.ஐ.டி.எப். (SITF) எனப்படும் இந்தியர்களுக்கான சிறப்பு அமுலாக்க நடவடிக்கைக் குழுவின் சிலாங்கூர் மாநில வட பகுதிக்கான சேவை மையத்தை ஈஜோக் வட்டாரத்தில் திறந்து வைத்தார்.

டாக்டர் சுப்ரா,  இந்தியர் புளுபிரிண்ட் எனப்படும் இந்தியர்களுக்கான வியூகச் செயல் திட்ட அமுலாக்கக் குழுவின் தலைவருமாவார்.

கோலசிலாங்கூர் எஸ்.ஐ.டி.எப் சேவை மையத்தைத் திறந்து வைத்த பின்னர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தபோது அடுத்த பொதுத் தேர்தலில் ஈஜோக்கில் மீண்டும் மஇகா போட்டியிடும் என்ற அறிவிப்பை டாக்டர் சுப்ரா வெளியிட்டார்.

kuala selangor-SITF- (8)

“கடந்த இரு தேர்தல்களில் அத்தொகுதியில் ம இ கா வேட்பாளர் தோல்வி அடைந்திருந்தாலும், பாரம்பரிய அடிப்படையில் ம இ கா அத்தொகுதியில் மீண்டும் போட்டியிடுவது உறுதி. எனவே, அத்தொகுதியை ம இ கா யாருக்கும் விட்டுக் கொடுக்காது. கட்சி நிறுத்தும் வேட்பாளரின் வெற்றிக்காக அனைவரும் கடுமையாகப் பாடுப்பட வேண்டும்” எனவும் டாக்டர் சுப்ரா கேட்டுக் கொண்டார்.

கடந்த பொதுத் தேர்தலில் மஇகா சார்பாக மஇகா சிலாங்கூர் மாநிலத்தின் நடப்புச் செயலாளர் கே.ஆர்.பார்த்திபன் போட்டியிட்டார். ஈஜோக் சட்டமன்றத் தொகுதிக்கான தேசிய முன்னணி ஒருங்கிணைப்பாளராகவும் பார்த்திபன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

படங்கள்: நன்றி – drsubra.com