Home நாடு “ஆட்சியைப் பிடிப்போம்” – வாஷிங்டன் போஸ்ட் பேட்டியில் மகாதீர்!

“ஆட்சியைப் பிடிப்போம்” – வாஷிங்டன் போஸ்ட் பேட்டியில் மகாதீர்!

960
0
SHARE
Ad

Mahathir-Mohamad-கோலாலம்பூர் – எதிர்வரும் பொதுத் தேர்தலில் பெரும்பான்மை பெற்று ஆட்சியை எதிர்க்கட்சிக் கூட்டணி கைப்பற்றுவது உறுதி என அமெரிக்காவிலிருந்து வெளிவரும் வாஷிங்டன் பத்திரிக்கைக்கு வழங்கிய சிறப்புப் பேட்டியில் மகாதீர் தெரிவித்திருக்கிறார்.

ஊழல் குற்றச்சாட்டுகள், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்கள் ஆகியவற்றின் காரணமாக, மக்கள் ஆத்திரத்தில் இருக்கிறார்கள் என்றும் இதனை அடிப்படையாக வைத்து அவர்களின் வாக்குகளைத் தங்களால் வெல்ல முடியும் என்றும் மகாதீர் தெரிவித்திருக்கிறார். “கடந்த ஆண்டுகளில் நாடு கண்ட மேம்பாட்டில் பெரும்பகுதியை நஜிப் அழித்து விட்டார் என மக்கள் நம்புகிறார்கள்” என்றும் மகாதீர் தெரிவித்திருக்கிறார்.

“நமது நாட்டின் தலைவரைத் திருடன் எனக் கூறுகிறார்கள். இப்படி நடப்பதை நான் பார்த்துக் கொண்டிருக்கப் போவதில்லை. நாம் செழிப்பாகவும், சிறப்பாகவும் இருந்த கடந்த காலத்துக்கு மாறியாக வேண்டும்” என்றும் மகாதீர் வலியுறுத்தினார்.

#TamilSchoolmychoice

washington-post-logoமீண்டும் பிரதமராவதற்கு தனக்கு விருப்பமில்லை என்று மீண்டும் கூறியிருக்கும் மகாதீர், நஜிப்பை வீழ்த்துவதும், மலேசியாவின் கௌரவத்தை நிலைநாட்டுவதும்தான் தனது குறிக்கோள் எனத் தெரிவித்திருக்கிறார்.

92 வயதானாலும், இரண்டு இருதய அறுவைச் சிகிச்சைகளுக்குப் பின்னரும் இன்னும் தனது நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்ளாமல் நாடெங்கும் சுற்றிச் சுழன்று நஜிப்புக்கு எதிராகப் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார் மகாதீர் என்றும் வாஷிங்டன் போஸ்ட் மகாதீரின் பேட்டிக் கட்டுரையில் சுட்டிக் காட்டியுள்ளது.

இதற்கிடையில், நஜிப் இந்த ஆண்டே பொதுத் தேர்தலை நடத்தலாம் என்ற ஆரூடங்கள் இருந்தாலும், அடுத்தாண்டுதான் 14-வது பொதுத் தேர்தல் நடைபெறும் என்றும் இதற்குக் காரணம், சபா, சரவாக் மாநிலங்களில் தனது செல்வாக்கை வலுவாக்க நஜிப்புக்கு மேலும் கூடுதலான கால அவகாசம் தேவைப்படுகிறது என்றும் மகாதீர் ஆரூடம் தெரிவித்திருக்கிறார்.

“மக்களிடையே எங்களுக்கு ஆதரவு இருக்கிறது. பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்க எங்களால் முடியும்” என நம்பிக்கைத் தெரிவித்திருக்கும் மகாதீர், “நாங்கள் நஜிப்புடன் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மிகப் பெரியவை. அவரை பதவியில் இருந்து அகற்றாவிட்டால் நம்மால் எதையும் அடைய முடியாது” என்றும் வலியுறுத்தியிருக்கிறார்.