Home நாடு “வாய்ப்புகளையும், நிதிகளையும் தந்தோம். மஇகாதான் பயன்படுத்திக் கொள்ளவில்லை” – மகாதீர் குற்றச்சாட்டு

“வாய்ப்புகளையும், நிதிகளையும் தந்தோம். மஇகாதான் பயன்படுத்திக் கொள்ளவில்லை” – மகாதீர் குற்றச்சாட்டு

922
0
SHARE
Ad

கோலாலம்பூர் – நேற்று புதன்கிழமை இரவு தலைநகரிலுள்ள சீன அசெம்பிளி மண்டபத்தில் ஹிண்ட்ராப் இயக்கத்தினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்ட துன் மகாதீர் “இந்தியர்கள் புறக்கணிக்கப்பட்டதற்கு மஇகாவும், அந்தக் கட்சியின் அப்போதைய தேசியத் தலைவரும்தான் காரணம். தேசிய முன்னணி அரசாங்கம் உருவாக்கித் தந்த வாய்ப்புகளையும், ஒதுக்கித் தந்த நிதிகளையும் மஇகா முறையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை” என்று கூறியிருக்கிறார்.

பக்காத்தான் கூட்டணியின் வியூகப் பங்காளியாக இணைந்துள்ள ஹிண்ட்ராப் ஏற்பாட்டில் நடைபெற்ற கலந்துரையாடலுக்கு வந்திருந்தவர்களில் பலர் மகாதீரின் பதவிக் காலத்தில் ஏன் இந்தியர்கள் புறக்கணிக்கப்பட்டார்கள் – மகாதீர்தான் அதற்குக் காரணமா – மகாதீர்தான் எதுவும் இந்தியர்களுக்காக செய்யவில்லை – என்பது போன்ற தொனியிலான கேள்விகளைத் தொடுத்தனர்.

அவற்றுக்கு பதிலளித்த மகாதீர், “எனது நிர்வாகம் மஇகா விடுத்த பல கோரிக்கைகளைப் பூர்த்தி செய்து கொடுத்தது. ஆனால், நாங்கள் உருவாக்கிக் கொடுத்த வாய்ப்புகளையும், நிதி ஒதுக்கீடுகளையும், தேசிய முன்னணியின் உறுப்பியக் கட்சியான மஇகா முறையான வகையில் பயன்படுத்தவில்லை. அதன் மூலம் அதிகபட்ச பயன்களை அடைய முடியவில்லை. அதன் காரணமாக, நான் எதையும் செய்யவில்லை என்பது போன்ற தோற்றம் ஏற்பட்டது” என விளக்கினார்.

#TamilSchoolmychoice

மஇகாவின் பல கோரிக்கைகளைத் தனது நிர்வாகம் நிறைவேற்றிக் கொடுத்தது என்றாலும் அனைத்து கோரிக்கைகளையும் தங்களால் நிறைவேற்ற முடியவில்லை என்பதையும் மகாதீர் ஒப்புக் கொண்டார்.

தான் நிறைய கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்ததை மஇகாவே கடந்த காலங்களில் பகிரங்கமாக ஒப்புக் கொண்டது என்பதையும் மகாதீர் சுட்டிக் காட்டினார்.

“எனவே, நான் இந்தியர்களுக்காக எதையும் செய்யவில்லை எனக் கூறுவது நியாயமில்லாத ஒன்று” என்றும் மகாதீர் தன்னைத் தற்காத்தார்.

அதே வேளையில் மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் என்று குறிப்பிட்டு பெயர் குறிப்பிடாமல் சில தாக்குதல்களையும் மகாதீர் தொடுத்தார்.

“மஇகாவில் அந்தத் தலைவர் பதவியில் இருந்தபோது தனது பதவிக்கு ஆபத்து எனக் கருதிய யாரையும் வளரவிட்டதில்லை. யாராவது அவரை எதிர்த்து நடந்து கொண்டால், கட்சியிலிருந்தே அந்த நபரைத் தூக்கி எறிந்து விடுவார். நான் 2003-ஆம் ஆண்டில் பதவியை விட்டு விலகிய பின்னரும் அந்தத் தலைவர் தனது பதவியில் தொடர்ந்தார்” என்றும் மகாதீர் கூறினார்.

முன்னாள் மஇகா தேசியத் தலைவர் துன் சாமிவேலுவைத்தான் அவ்வாறு பெயர் குறிப்பிடாமல் மகாதீர் சுட்டிக் காட்டினார் என நம்பப்படுகிறது.

அத்தகைய தலைவர் மீது நீங்கள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை – கட்சியை அவ்வாறு நடத்தியதற்கு ஏன் கண்டனங்கள் தெரிவிக்கவில்லை – என்று கேட்கப்பட்டதற்கு மஇகாவின் உட்கட்சி விவகாரங்களிலும், பூசல்களிலும் தலையிடுவதற்கு தனக்கு உரிமையில்லை என்றும் மகாதீர் தெரிவித்தார்.

“வெவ்வேறு கட்சிகளில் இருந்து இந்தியப் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவது ஒரு நல்ல நடைமுறை” என்றும் அதன் மூலம் அவர்கள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு மக்களுக்கு சேவை செய்வர் என்றும் மகாதீர் கூறினார்.

“உதாரணமாக பக்காத்தான் ஹரப்பான் கூட்டணியில் இருக்கும் பிகேஆர், ஜசெக இரு கட்சிகளிலும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். ஆனால், தேசிய முன்னணியிலோ மஇகா மட்டும்தான் இருக்கிறது. எனது காலத்தில் அந்த சிறப்புத் தலைவர் மட்டும்தான் இருந்தார்” என்றும் மகாதீர் குறிப்பிட்டார்.

இதே கலந்துரையாடல் கூட்டத்தில் நேற்று துன் மகாதீருடனான கேள்வி-பதில் அங்கம் முன்கூட்டியே அனுமதிக்கப்படாத கேள்விகள் கேட்கப்பட்டதால் பாதியில் முடிவடைந்ததாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.