Home நாடு ‘ரெண்டாங் உணவு’ சர்ச்சை – நஜிப்பையும், மகாதீரையும் ஒரே கருத்தில் இணைத்திருக்கிறது!

‘ரெண்டாங் உணவு’ சர்ச்சை – நஜிப்பையும், மகாதீரையும் ஒரே கருத்தில் இணைத்திருக்கிறது!

1376
0
SHARE
Ad

கோலாலம்பூர் – கடந்த திங்கட்கிழமை ஒளிபரப்பான ‘மாஸ்டர் செஃப் யூகே’ நிகழ்ச்சியில் மலேசியாவைச் சேர்ந்த சமையல் கலைஞர் ஜாலே காதிர் ஆல்ஃபின் (வயது 44), மலேசியாவின் பாரம்பரிய உணவான நாசி லெமாவுடன், சிக்கன் ரெண்டாங்கைச் சமைத்து நிகழ்ச்சியின் நடுவர்களுக்கு அளித்தார்.

அதனை சுவைத்த நடுவர்களில் ஒருவரான கிரேக் வாலாஸ், “எனக்கு ரெண்டாங்கின் சுவை பிடித்திருக்கிறது. தேங்காய்ப் பால் இனிக்கிறது. ஆனால் கோழியின் தோல் பகுதி மொறுமொறுப்பாக இல்லை. அதனால் என்னால் சாப்பிட முடியவில்லை. எல்லா சாறும் தோலில் தான் இருக்கிறது என்னால் சாப்பிடமுடியவில்லை” என விமர்சித்தார்.

மற்றொரு நடுவரான ஜான் டோரோடு, “ஜாலேவின் ரெண்டாங்கில் தவறு இருக்கிறது. கோழி அழகாக, மிருதுவாக வேகுவதற்குப் போதுமான நேரம் இல்லாமல் இருந்திருக்கிறது. அதனால் கடினமாக, உண்மையான சுவையின்றி இருக்கிறது” என்று கருத்துக் கூறினார்.

#TamilSchoolmychoice

இந்த இரண்டு நடுவர்களின் எதிர்மறையான கருத்தால் ஜாலே அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

நஜிப்பும், மகாதீரும் ஒரே கருத்து

இந்நிகழ்ச்சியைப் பார்த்த மலேசியர்கள் பலர், நடுவர்களின் விமர்சனத்தால் மிகவும் அதிருப்தியடைந்தனர். மலேசியப் பாரம்பரிய உணவான ரெண்டாங்கில் கோழி மொறுமொறுப்பாக இருக்காது என்றும், மிருதுவாகத் தான் இருக்கும் என்று ஃபேஸ்புக், டுவிட்டர், இண்ஸ்டாகிராம் என நட்பு ஊடகங்கள் அனைத்திலும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

உண்மையில், நடுவர்கள் இருவரும் அனுபவம் வாய்ந்தவர்கள் தானா? என்றும் சிலர் கேள்வி எழுப்பினர்.

இந்நிலையில், தற்போதைய அரசியல் சூழலில் எதிரும் புதிருமாக இயங்கி வரும் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவும், நடப்பு பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கும், இந்த விசயத்தில் ஒரே கருத்தைக் கூறியிருக்கின்றனர்.

நஜிப் தனது இன்ஸ்டாகிராமில், சிக்கன் ரெண்டாங் புகைப்படத்தைப் போட்டு, “சிக்கன் ரெண்டாங்கை மொறுமொறுப்பாக சுவைப்பவர்கள் எங்கே இருக்கிறார்கள்?” எனக் கேள்வி எழுப்பினார்.

இதனிடையே, எதிர்மறை கருத்துக் கூறிய நடுவர் ஜான் டோரோடு தனது டுவிட்டரில், “ரெண்டாங் இந்தோனிசியர்களுடையதாக இருக்கலாம். மிகவும் பிடிக்கும். அற்புதம்..நீங்களெல்லாம் எவ்வளவு ஆர்வத்தோடு இருக்கிறீர்கள். நமஸ்தே” எனப் பதிவிட்டார்.

ரெண்டாங் இந்தோனிசியாவைச் சேர்ந்த உணவு என ஜான் கூறியது மலேசியர்களை மேலும் ஆத்திரமூட்டியது.

ஜான் டோரோடின் டுவிட்டர் பதிவிற்கு, மகாதீர் ஒரு பதில் ஒன்றைப் போட்டு இந்த விவகாரத்தை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தினார்.

“நீங்கள் சிக்கன் ரெண்டாங்குடன் கேஎஃப்சி சிக்கனை ஒப்பிட்டு குழப்பிக் கொண்டிருக்கக் கூடும்” என மகாதீர் குறிப்பிட்டார்.

மகாதீர் தனது கருத்தின் மூலம் கேஎஃப்சி நிறுவனத்தை உள்ளே இழுத்ததையடுத்து, கேஎஃப்சி அதனை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, தற்போது சாதுரியமாக விளம்பரம் ஒன்றை வெளியிட்டு வருகின்றது.

மலேசியாவிற்கான பிரிட்டிஷ் தூதர் கருத்து

இதனிடையே, மலேசியாவிற்கான பிரிட்டிஷ் தூதர் விக்கி டிரேடல் தனது டுவிட்டரில் வெளியிட்டிருக்கும் கருத்தில், “மாஸ்டர் செஃப் யூகே, ஜான் டோரோடு, கிரேக் வாலாஸ், ரெண்டாங்.. மலேசியாவின் சிறப்பு உணவுகளில் ஒன்று. அதனை இந்தோனிசிய உணவுகளுடன் ஒப்பிட்டு குழப்பிக் கொள்ளக் கூடாது. அது கோழி, ஆடு, மாடு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால் அது எப்போதுமே மொறுமொறுப்பாக இருந்தது இல்லை. நாசி லெமாவுடன் வழங்கப்படும் பொறித்த கோழியுடன் அதனைக் குழப்பிக் கொள்ளக் கூடாது” என்று தெரிவித்திருக்கிறார்.

தற்போது இந்த விவகாரத்தை இந்தோனிசியா, புரூனே, மலேசியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சமையல் கலைஞர்கள் நட்பு ஊடகங்களில் காரசாரமாக விவாதித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.