Home நாடு பாலியல் புகார்: தாமே முன்வந்து விளக்கம் அளித்த ஷாஹிடான் காசிம்

பாலியல் புகார்: தாமே முன்வந்து விளக்கம் அளித்த ஷாஹிடான் காசிம்

1064
0
SHARE
Ad

கோலாலம்பூர் – ஒரு முன்னாள் அமைச்சர் 15-வயது மாணவி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்தார் என எழுந்த புகார்களைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக, யார் அந்த அமைச்சர் என்ற ஆரூடங்கள் ஊடக வட்டாரங்களில் எழுப்பப்பட்டு வந்தன.

சம்பந்தப்பட்ட காவல்துறை புகார்கள் பெர்லிஸ் மாநிலத்தில் செய்யப்பட்டிருந்ததால், அந்த முன்னாள் அமைச்சரும் இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினரும் அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்தான் எனக் கண்டுபிடிப்பது பொதுமக்களுக்கு சிரமமானதாக இருக்கவில்லை. அதிலும் பெர்லிஸ் இரண்டே நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்ட மாநிலம் என்பதால் யார் புகார் சுமத்தப்பட்ட அந்த நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இருவரில் ஒருவர்தான் என்பதைக் கண்டுபிடிப்பதிலும் அதிகம் சிரமம் இல்லை.

இந்நிலையில்தான் ஆராவ் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ஷாஹிடான் காசிம் (படம்) தாமே முன்வந்து இந்த பாலியல் புகார்கள் குறித்து சில விளக்கங்கள் அளித்திருக்கிறார்.

#TamilSchoolmychoice

“இது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட விவகாரம். அந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டபோது, நன்கொடைகளுக்காக பாட்டுப் பாடி மகிழ்விக்கும் குழுவினருக்கு நான் நன்கொடை அளிக்க முற்பட்டேன். அந்தக் குழுவின் நிர்வாகியும் என்னைப் பார்க்க விரும்பினார். நான் நன்கொடை தந்து விட்டுப் புறப்பட்டு விட்டேன். அந்தக் குழுவினரை எனது குடும்ப உறுப்பினர்களாகவே நான் பார்க்கிறேன். தவறான கண்ணோட்டத்தில் நான் நடந்து கொள்ளவில்லை” என ஷாஹிடான், தனது வழக்கறிஞர் துணையோடு தயாரிக்கப்பட்ட பதிலை நேற்று புதன்கிழமை பத்திரிக்கையாளர்களிடத்தில் வாசித்தார்.

எனினும் குறிப்பிட்ட சம்பவம் நடந்த மறுநாள் 15-வயதுடைய அந்தப் பெண் காவல் துறையில் புகார் ஒன்றைச் செய்திருந்தார். ஆனால், அடுத்த ஒரு மணி நேரத்தில் அந்தப் புகாரை அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் திரும்ப மீட்டுக் கொண்டனர்.

அதைத் தொடர்ந்து, அந்தப் புகார் மீட்டுக் கொள்ளப்பட்டாலும், நாங்கள் தொடர்ந்து அந்தப் புகாரை விசாரிக்க முடியும் என காவல்துறை அறிவித்தது.

கடந்த செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 30) புகார் கொடுத்த அந்தப் பெண் புக்கிட் அமானிலுள்ள காவல்துறை தலைமையகத்திற்கு வரவழைக்கப்பட்டு சில மணி நேரம் விசாரிக்கப்பட்டார்.

இதைத் தொடர்ந்துதான் ஷாஹிடான் காசிம் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் தன்னிலை விளக்கம் அளித்தார். அந்தப் பெண்ணுடன் தனியாக காரில் இருந்தது குறித்தும், அப்போது அவரது கார் ஓட்டுநர் இருந்தாரா என்பது குறித்தும் பத்திரிக்கையாளர் கேள்விகளைத் தொடுத்தபோது, “காவல் துறையில் நான் புகார் செய்திருக்கிறேன். அவர்கள் விசாரித்து வருவதால் மேற்கொண்டு எதையும் கூறுவதற்கில்லை” என ஷாஹிடான் மழுப்பினார்.

அந்தப் பெண்ணின் காவல் துறை புகார் மீட்டுக் கொள்ளப்பட்டிருப்பினும் பத்திரிக்கையாளர்கள்தான் இது குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள் என்றும் ஷாஹிடான் குறை கூறினார்.