படத்தின் கதையைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. கே.பாக்கியராஜ் முதற்கொண்டு, இந்தக் கதைக்கு உரிமை கொண்டாடிய வருண் இராஜேந்திரன் வரை ஏற்கனவே பலரிடம் கேட்டுவிட்ட கதைதான்.
தனது ஓட்டை கள்ள ஓட்டாகப் போட்டுவிட்டார்கள் என்பதை விட்டுவிடக் கூடாது என சட்டம், நீதிமன்றம் என அனைத்து முனைகளிலும் விஜய் போராடுவது என்பது அற்புதமானத் தொடக்கம். ஆனால், போகப் போக, விஜய் இரசிகர்களுக்குத் தீனி போட வேண்டும் என்ற காரணத்திற்காக படத்தில் அளவுக்கதிகமான விஷயங்களைத் திகட்டத் திகட்டச் சேர்த்து படத்தை இரசிக்க முடியாமல் செய்துவிட்டார்கள். அரசாங்கத்தின் எல்லா அம்சங்களையும் ஒரேயடியாகப் போட்டுத் தாக்குவது ரொம்பவும் அதிகப்படி.
தமிழ்ப்பட கதாநாயகன் எந்த வேலை பார்ப்பவனாக இருந்தாலும், சண்டை என்று வந்து விட்டால், ஒற்றை ஆளாக நின்று அடிப்பான் என்பது எம்ஜிஆர் காலம் தொட்டு இருந்து வரும் தமிழ் சினிமா இலக்கணம். இதிலும், அனைத்துலக நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்தாலும், தெருவில் இறங்கி பத்து பேரை அடித்து வீழ்த்துகிறார் விஜய்.
ஆளும் கட்சித் தலைவர் பழ.கருப்பையா நடத்தும் பிரம்மாண்டமான பொதுக் கூட்டத்திற்கு சென்று மேடையில் ஏறி வம்புக்கு இழுக்கிறார்.
நாடு முழுக்க 15 நாட்களில் சேவையாளர்களை அடையாளம் கண்டு, தேர்தலில் அவரவர் தொகுதிகளில் தனித் தனி சின்னங்களோடு நிறுத்தி வெற்றி பெற வைக்கிறாராம்.
இப்படிப் படம் முழுக்க பல ஓட்டைகள், நம்ப முடியாத திருப்பங்கள் அடுத்தடுத்து வருவதால், இரசிக்க முடியவில்லை. குறிப்பாக, தமிழ் நாட்டு இரசிகர்கள் கைதட்டி, விசில் அடித்து ஆர்ப்பரிக்கும் வசனங்கள் இடம் பெறும் இடங்களில் கூட, மலேசியத் திரையரங்கு இரசிகர்கள் அமைதியாக, சலசலப்பு இல்லாமல் அமர்ந்திருப்பதைப் பார்க்கும்போது, படத்தின் கதை வெளிநாட்டு இரசிகர்களுக்கு ஒட்டவில்லை என்பது தெளிவாகவே தெரிகிறது.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உற்சாகப் பாடல்கள்
விஜய் தவிர, படத்தில் கவரும் இன்னொரு அம்சம் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை. விஜய்க்காக ஒலிக்கும் பின்னணி இசை அவ்வளவாக மனதில் நிலைக்கவில்லை என்றாலும், பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ரகம்.
ஒருவிரல் புரட்சியே என்ற அரசியல் போராட்டப் பாடலாகட்டும், மொழி புரியாத வடசென்னை இரக சிம்டாங்காரன் பாடலாகட்டும், ரஹ்மான் அனுபவித்துத் தந்திருக்கிறார். ஒருவிரல் புரட்சியே பாடலை அவரே பாடியும் இருக்கிறார்.
கீர்த்தி சுரேஷூக்கு அழகுப் பதுமை வேடம். விஜய் கூடவே வந்து போகிறார். அவ்வளவுதான்.
விஜய் வழங்கும் வழக்கமான நகைச்சுவை இந்தப் படத்தில் இல்லாதது இரசிகர்களுக்குக் குறை. அதைக் கொஞ்சம் தீர்த்து வைக்கிறார்கள், யோகி பாபுவும், ராதா ரவியும்! தொலைக்காட்சி விவாதத்தில் அதிரடியாக நேரில் வந்து கலந்து கொள்ளும் விஜய், தனது தலைமைச் செயல் அதிகாரி பதவியிலிருந்து விலகுவதாக அறிவிக்க, அதைத் தொடர்ந்து “தம்பி வேலையை விட்டுவிட்டதால ரொம்ப பிரீயா இருக்காரு. நமக்கு நிறைய வேலை இருக்கு” என ராதா ரவி கிளம்புவது திரையரங்கையே அதிர வைக்கிறது.
படத்தின் முக்கால் வாசிப் பகுதியில் வரலெட்சுமி சென்னைக்கு வந்து இறங்கியவுடன் விஜய்க்கு எதிராக வகுக்கும் அதிரடி வியூகங்கள்தான் படத்தைக் கொஞ்சம் தூக்கி நிறுத்துகிறது.
மற்றபடி, ஷங்கரின் முதல்வன் படத்தைப் போல, நடப்பு காலத்திற்கேற்ற அற்புதமான அரசியல் செய்திகளோடு வந்து அனைவரையும் கவர்ந்திருக்க வேண்டிய அம்சங்கள் இருந்தும், விஜய் இரசிகர்களைத் திருப்திப்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு மட்டும் படம் எடுத்து, கோட்டை விட்டு விட்டார்கள்!
-இரா.முத்தரசன்