

ஈப்போ – பேராக் மாநிலத்தின் பாரிட் வட்டாரத்தில் உள்ள பூலோ ஆக்கார் தோட்டத் தமிழ்ப்பள்ளி தேசிய நிலையில் இணைப்பாட நனிச்சிறந்த பள்ளியாகத் தேர்வு பெற்று இரண்டாவது பரிசை வாகை சூடியது.
தேசிய நிலையில் நாடு தழுவிய அளவில் 3071 பள்ளிகளிடையே நடத்தப்பட்ட மதிப்பீட்டில் பூலோ ஆக்கார் தமிழ்ப்பள்ளி இரண்டாவது பரிசு பெற்றிருப்பது தமிழ்ப்பள்ளிகளுக்கே பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.
24 மாணவர்கள் மட்டுமே பயிலும் இப்பள்ளியின் தலைமையாசிரியர் மனஹரன் தலைமைத்துவத்திலும் இணைப்பாடத் துணைத் தலைமையாசிரியர் பிரபு ஜெயசீலனின் அருமையான முயற்சியாலும் பள்ளி ஆசிரியர்களின் ஒன்றுபட்ட உழைப்பினாலும் இந்தப் பள்ளி இணைப்பாடத் துறையில் பேரா மாநிலத்திலேயே மிகச் சிறந்த பள்ளியாகப் பெயர் பொறித்துள்ளது. ஒரு தமிழ்ப்பள்ளி இந்த அளவுக்குச் சிறந்து விளங்குவது பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளதோடு பாராட்டையும் பெற்றுள்ளது என்று இந்த வெற்றியைப் பற்றி கருத்து தெரிவித்த பேராக் மாநிலத் தமிழ்ப்பள்ளி அமைப்பாளர் சுப.சற்குணன் குறிப்பிட்டார்.
குறைந்த எண்ணிக்கையில் மாணவர்களைக் கொண்டிருக்கும் தமிழ்ப்பள்ளிகளிலும் அதன் தரம் மிகச் சிறப்பான நிலைக்கு உயர்ந்து வருவதை இந்த வெற்றி பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.