அமைச்சரவையின் முடிவுகள் என்பது கூட்டு முடிவாகும். எனவே, ஒவ்வொரு அமைச்சு முடிவுக்கும் ஒட்டுமொத்த அமைச்சரவை உறுப்பினர்களும் பொறுப்பாகும். அதை விடுத்து ஓர் அமைச்சர் மற்றொரு சக அமைச்சரைப் பதவி விலகச் சொல்வது என்பது காலம் காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் அமைச்சரவையின் கூட்டு முடிவு பாரம்பரியத்திற்கு எதிரானதாகும் எனவும் ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான ராம் கர்ப்பால் தெரிவித்தார்.
அப்படியே வேதமூர்த்தியைக் கண்டிக்கும் அறைகூவல் விடுக்கப்பட வேண்டுமென்றால் அது பிரதமரிடம் இருந்துதான் வரவேண்டுமே ஒழிய, இன்னொரு அமைச்சரிடமிருந்து வரக் கூடாது என்றும் கூறிய ராம் கர்ப்பால் இதுபோன்று அமைச்சர்களிடம் இருந்து வெளிப்படும் குமுறல்கள், அரசாங்கத்தின் ஒற்றுமையற்ற தன்மையை எடுத்துக் காட்டுவதாகவே அமையும் என்றும் இதனால் அரசாங்கத்தின் மீதான நம்பகத்தன்மை குறையும் என்றும் சாடினார்.
இதுபோன்ற பகிரங்கமான பதவி விலகல் அறைகூவல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் இதனால் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கத்தின் வளர்ச்சி மீதும், நம்பகத் தன்மை மீதும் பாதிப்பு ஏற்படும் என்றும் ராம் கர்ப்பால் எச்சரித்தார்.