கோலாலம்பூர்: மெட்ரிகுலேஷன் வகுப்புக்கான மாணவர் சேர்க்கையை 25,000-லிருந்து 40,000-ஆக உயர்த்த அமைச்சரவை இன்று புதன்கிழமை ஒப்புதல் வழங்கியதாக கல்வி அமைச்சர் மஸ்லீ மாலிக் அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்தார்.
ஆயினும், பூமிபுத்ரா மாணவர்களுக்கான 90 விழுக்காடு இடமும், பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீடும் செயலில் இருக்கும் என அவர் தெரிவித்தார்.
சிறந்த முறையில் கல்வியை முடித்த மாணவர்களுக்கும் வாய்ப்புகள் வழங்குவதை உறுதிப்படுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
எஸ்பிஎம் தேர்வில் சிறப்பான தேர்ச்சியைப் பெற்ற இந்திய மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் வகுப்பில் சேர்ந்து படிக்க வாய்ப்புகள் நிராகரிக்கப்பட்டதன் காரணமாக கடந்த வாரங்களில் இந்தியர்களிடமிருந்து பெரும் எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து இது குறித்து அமைச்சரவையில் கலந்தாலோசிக்கப்படும் என பிரதமர் அண்மையில் கூறியிருந்தார்.





