Home நாடு கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கத்தின் 35ஆம் ஆண்டு தமிழ் விழா – பரதநாட்டியப் போட்டி

கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கத்தின் 35ஆம் ஆண்டு தமிழ் விழா – பரதநாட்டியப் போட்டி

1289
0
SHARE
Ad

கிள்ளான் – கோலக்கிள்ளான் இந்து இளைஞர் இயக்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் விழா 35ஆவது ஆண்டாக இவ்வாண்டு கொண்டாடப்படுகின்றது. மொழி, கலை, சமயம், பண்பாடு ஆகிய கூறுகளை உள்ளடக்கி, 6 வயது முதல் 60 வயதிலான அனைத்து தரப்பினரும் பங்கேற்கும் வண்ணம் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாண்டு தமிழ் விழாவின் முதல் அங்கமாக பரதநாட்டியப் போட்டி கடந்த 8 மற்றும் 9 ஜூன் அன்று சிறப்புடன் நடைபெற்றது.

8 ஜூன் அன்று 13 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான போட்டி, கிள்ளான் தெப்பி சுங்கை ஶ்ரீ செல்வ விநாயகர் ஆலய மண்டபத்தில் நடைபெற்ற வேளையில், 14 வயதிற்கு மேற்பட்டோருக்கான போட்டி 9 ஜூன் அன்று கிள்ளான் ஶ்ரீ சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தில் அரங்கேறியது. இருநாள்களிலும் சுமார் 80 போட்டியாளர்கள் சிறப்புற பங்கேற்றனர்.

#TamilSchoolmychoice

13 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான பிரிவில் முதல் நிலையில் வாகை சூடியவருக்கு மலேசிய இந்திய தூதரகத்தின் சுழற்கிண்ணமும் வெற்றிக் கோப்பையும் RM 1,250 ரொக்கத் தொகையும் பரிசளிக்கப்பட்டது.

இரண்டாவது நிலையில் வெற்றி பெற்றவருக்கு வெற்றிக் கோப்பையும் RM 750 ரொக்கத் தொகையும் வழங்கப்பட்ட வேளையில் மூன்றாம் நிலை வெற்றியாளருக்கு வெற்றிக் கோப்பையும் RM 500 ரொக்கத் தொகையும் வழங்கப்பட்டது. இப்பிரிவில் வெற்றி பெற்றவர்கள் பின்வருமாறு:

முதல் நிலை – குமாரி தேவனஶ்ரீ இளங்கோ
இரண்டாம் நிலை – குமாரி நவீனா ஶ்ரீ கருணாகரன்
மூன்றாம் நிலை – குமாரி டினீஷா ஶ்ரீ இராகவன்
நான்காம் நிலை – குமாரி தேஜஸ்வினி சத்தியசீலன்
ஐந்தாம் நிலை – குமாரி அஷிகா சேந்தன்

14 வயதிற்கு மேற்பட்டோருக்கான பிரிவில் முதல் நிலையில் வாகை சூடியவருக்கு மலேசிய இந்திய தூதரகத்தின் சுழற்கிண்ணமும் வெற்றிக் கோப்பையும் RM 2000 ரொக்கத் தொகையும் பரிசளிக்கப்பட்டது.

இரண்டாவது நிலையில் வெற்றி பெற்றவருக்கு வெற்றிக் கோப்பையும் RM 1000 ரொக்கத் தொகையும் வழங்கப்பட்ட வேளையில் மூன்றாம் நிலை வெற்றியாளருக்கு வெற்றி கோப்பையும் RM 500 ரொக்கத் தொகையும் வழங்கப்பட்டது. இப்பிரிவில் வெற்றி பெற்றவர்கள் பின்வருமாறு:

முதல் நிலை – குமாரி டெசாலினி கணேசன்
இரண்டாம் நிலை – குமாரி ஓமனா சேதுமாதவன்
மூன்றாம் நிலை – குமாரி டெனாஸ்வரி கணேசன்
நான்காம் நிலை – குமாரி பத்மஷர்மினி புஷ்பநாதன்
ஐந்தாம் நிலை – குமாரி சங்கரி தியாகராஜா

இருநாட்கள் நடைப்பெற்ற இப்பரத நாட்டியப் போட்டியில் மலேசிய இந்து சங்க ஶ்ரீ அண்டலாஸ் வட்டாரப் பேரவையின் தலைவி திருமதி.சரஸ்வதி அவர்கள் சிறப்பு பிரமுகராகக் கலந்துகொண்டு பரிசுகளை எடுத்து வழங்கினார்.

ஶ்ரீ அண்டலாஸ் மாரியம்மன் ஆலயத்தின் அறங்காவலர் டத்தோ மேஜர் M.S.மூர்த்தி அவர்கள் ரொக்கப் பரிசுக்கான தொகையை நன்கொடை அளித்து சிறப்பித்தார். மேலும் இப்போட்டிக்கு ஆதரவளித்த தெப்பி சுங்கை ஶ்ரீ செல்வ விநாயகர் ஆலயம், கிள்ளான் ஶ்ரீ சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம், வல்லினம் மற்றும் இக்சோரா உணவகம் ஆகியோருக்கும் ஏற்பாட்டாளர்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

தமிழ் விழாவினை வருடந்தோறும் தமிழ் மொழிக்கும் தமிழ் சமூகத்திற்கும் பங்காற்றிய சான்றோர்களுக்கு ஈகம் செய்வது நமது வழக்கமாகும். அவ்வகையில் இவ்வருட தமிழ் விழாவினை ஓவியர் வீரச்சந்தானம் அவர்களுக்கு ஈகம் செய்கின்றோம்.

தமிழ் விழாவின் அடுத்த அங்கமாக ஆரம்பப்பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் 15 ஜூன் அன்று கிள்ளான் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியிலும், இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கான புதிர்ப்போட்டி 29 ஜூன் அன்று ஶ்ரீ அண்டலாஸ் மகாமாரியம்மன் ஆலய மண்டபத்திலும் நடைபெறவுள்ளது.

இதனையே அழைப்பாகக் கொண்டு இந்நிகழ்ச்சிகளில் கலந்து சிறப்பிக்க ஏற்பாட்டாளர்கள் அனைவரையும் அழைக்கின்றனர்.

மேல் விபரங்களுக்கு : திரு.சு.குகனேசன் 0127477874 / 0333240678.