Home உலகம் கிரிக்கெட் : நியூசிலாந்து 239 ஓட்டங்கள் – 8 விக்கெட்டுகளை இழந்தது

கிரிக்கெட் : நியூசிலாந்து 239 ஓட்டங்கள் – 8 விக்கெட்டுகளை இழந்தது

2070
0
SHARE
Ad

மான்செஸ்டர் – (மலேசிய நேரம் மாலை 5.55) உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் அரையிறுதி ஆட்டத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 9) இங்கு நடைபெற்ற இந்தியாவுக்கும், நியூசிலாந்துக்கும் இடையிலான ஆட்டம் மழை காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

அந்த ஆட்டம் இன்று புதன்கிழமை பிரிட்டன் நேரப்படி காலை 10.30 மணிக்கு (மலேசிய நேரம் 5.30 மாலை) மீண்டும் தொடங்கியது.

நேற்றைய ஆட்டத்தில் 23 பந்து வீச்சுகளே எஞ்சியிருந்த நிலையில் மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து மழை பெய்த காரணத்தால் ஆட்டம் நிறுத்தப்பட்டு இன்று தொடரும் என அறிவிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

நேற்றைய ஆட்டத்தில் மிகச் சிறப்பாக பந்து வீசிய இந்தியக் குழு நியூசிலாந்தை அதிகமாக ஓட்டங்கள் எடுக்க விடாமல் தடுமாறச் செய்தது. 46.1 ஓவர்களில் 211 ஓட்டங்களை மட்டுமே எடுத்த நியூசிலாந்து 5 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில், இன்னும் 23 பந்து வீச்சுகளே எஞ்சியிருந்த கட்டத்தில் மழை குறுக்கிட்டது.

இன்று மலேசிய நேரப்படி மாலை 5.30 மணிக்குத் தொடங்கிய  ஆட்டத்தில், அடுத்தடுத்து இந்திய விளையாட்டாளர்கள் அபாரமாகப் பந்து வீசியதால் நியூசிலாந்து 3 விக்கெட்டுகளை இழந்தது.

இதனைத் தொடர்ந்து நியூசிலாந்து 239 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட்டுகளை இழந்து முதல் பாதி ஆட்டத்தை முடித்துக் கொண்டது.

இனி இரண்டாவது பாதி ஆட்டத்தில் 240 ஓட்டங்கள் என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கி விளையாடவிருக்கிறது.

இந்த ஆட்டம் புகழ்பெற்ற மான்செஸ்டர் ஓல்ட் டிராஃப்போர்ட் அரங்கில் நடைபெறுகிறது. இந்த அரங்கத்தில் இதுவரையில் நடைபெற்ற 2019-ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ணப் போட்டிகளில் எந்த குழு முதலில் பேட்டிங் செய்ததோ அந்தக் குழுதான் வெற்றி பெற்றிருக்கிறது.

எனவே, இந்த நம்பிக்கையை முறியடிக்கும் வகையில் இந்தியா நியூசிலாந்தைத் தோற்கடிக்குமா என்ற எதிர்பார்ப்பு இரசிகர்களிடையே எழுந்திருந்தது.

மற்றொரு அரை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தும், ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன. இந்த ஆட்டம் நாளை  வியாழக்கிழமை ஜூலை 11-ஆம் தேதி நடைபெறுகிறது.

இந்த இரண்டு அரையிறுதிச் சுற்றுகளிலும் வெற்றி பெறும் குழுக்களின் உலகக் கிண்ணத்திற்கான இறுதி ஆட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஜூலை 14-ஆம் தேதி நடைபெறும்.