ஹாங்காங்கில் ஜனநாயகப் போராட்டவாதிகள் தொடர்ந்து தங்களின் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வந்த வேளையில், 18 வயது போராட்டவாதியை நோக்கி ஹாங்காங் காவல் துறை அதிகாரி துப்பாக்கியால் சுட்டிருப்பது புதிய சர்ச்சைகளைக் கிளப்பியிருக்கிறது.
சுடப்பட்ட அவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹாங்காங் ஆர்ப்பாட்டத்தின்போது இன்று செவ்வாய்க்கிழமை போராட்டவாதிகளுக்கும் கலகத் தடுப்பு காவல் துறையினருக்கும் இடையில் பல இடங்களில் மோதல்கள் வெடித்தன. ஆர்ப்பாட்டக்காரர்கள் பல இடங்களில் தீவைத்தனர். காவல் துறையினரோ கண்ணீர் புகைக் குண்டுகளை பயன்படுத்தி கூட்டத்தினரைக் கலைக்க முற்பட்டனர். 4 மாதங்களாக நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டங்களில் இப்போதுதான் முதன் முறையாக துப்பாக்கிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் மேலும் விரிவடையலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.