Home One Line P2 இந்தியா : அமித் ஷாவின் வாக்குறுதியைத் தொடர்ந்து அடையாளப் போராட்டத்தைக் கைவிட்ட மருத்துவர்கள்

இந்தியா : அமித் ஷாவின் வாக்குறுதியைத் தொடர்ந்து அடையாளப் போராட்டத்தைக் கைவிட்ட மருத்துவர்கள்

590
0
SHARE
Ad

புதுடில்லி : தமிழகத்தில் கொவிட்-19 பாதிப்பால் மரணமடைந்த மருத்துவர் ஒருவர் அவரது சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்படுவதற்கு அந்த ஊர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, தாக்குதல்களும் நடத்தியிருப்பது இந்தியா முழுமையிலும் கடுமையான கண்டனங்களைத் தோற்றுவித்திருக்கிறது.

இதனைத் தொடர்ந்து, மருத்துவர்களுக்கு போதுமான பாதுகாப்பும், வசதிகளும் அரசாங்கத்தால் வழங்கப்படாததைக் கண்டிக்கும் வகையில், நாளை வியாழக்கிழமை ஏப்ரல் 23-ஆம் தேதியை கறுப்பு நாளாக அறிவித்து, இந்தியா முழுமையிலும் மருத்துவர்கள் கறுப்பு நிற சின்னங்கள் அணிந்து அடையாள ஆர்ப்பாட்டத்தை நடத்துவர் என இந்திய மருத்துவர் சங்கம் அறிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து இன்று புதன்கிழமை உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் (படம்), சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தனும் மருத்துவ சங்கத்தின் தலைவர்களுடன் காணொளி வழி பேச்சு வார்த்தைகள் நடத்தினர். அதன் பலனாக, தங்களின் அடையாளப் போராட்டத்தைக் கைவிடுவதாக மருத்துவ சங்கம் அறிவித்திருக்கிறது.

#TamilSchoolmychoice

உள்துறை அமைச்சரே முன்வந்து போதிய பாதுகாப்பு வசதிகளை உறுதி செய்வதாகத் தெரிவித்திருப்பதை முன்னிட்டு நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் இந்த காலகட்டத்தில் நிலைநிறுத்தும் வண்ணம் தங்களின் போராட்டத்தைக் கைவிடுவதாக மருத்துவ சங்கம் தெரிவித்திருக்கிறது.

அறிகுறிகள் காட்டாத கொவிட்-19

இதற்கிடையில் இந்தியாவில் நோய்த்தொற்று ஏற்பட்டவர்களில் 80 விழுக்காட்டினருக்கு அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றத்தின்  மூத்த விஞ்ஞானி கங்காகேத்கர் கூறியுள்ளார். இந்நிலை மிகவும் ஆபத்தானது என்று அவர் கூறியுள்ளார்.

தொற்று அறிகுறி இல்லாதவர்களைக் கண்டறிவது என்பது மிகவும் கடினமானது என்றும், கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்ட நபர்களின் தொடர்புகளை தடமறிந்த பின்னரே அவர்களை கண்டறிய முடியும் என்றும்  கங்காகேத்கர் கூறியுள்ளார்.

இன்று வரையில் இந்தியாவில் கொவிட்-19 பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,984 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கையும் 640 ஆக அதிகரித்துள்ளது.