Home One Line P1 மொகிதின், விசாரணை முடியும் வரை விடுமுறையில் செல்ல வேண்டும் – வழக்கறிஞர்கள் கோரிக்கை

மொகிதின், விசாரணை முடியும் வரை விடுமுறையில் செல்ல வேண்டும் – வழக்கறிஞர்கள் கோரிக்கை

818
0
SHARE
Ad

கோலாலம்பூர் – பிரதமர் மொகிதின் யாசின் பேசியதாகக் கூறப்படும் ஓர் ஒலிநாடா சமூக ஊடகங்களில் அண்மையில் வெளியாகியிருந்தது. அதன் தொடர்பில் பிகேஆர் கட்சியைச் சேர்ந்த இளைஞர் பிரிவின் உறுப்பினர்கள் சிலர் மொகிதின் மீது புகார் ஒன்றை ஊழல் தடுப்பு ஆணையத்திடம் செய்தனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தன்னைப் பிரதமராக ஆதரிப்பதற்காக அவர்களுக்கு அரசாங்க நிறுவனங்களில் பதவிகளை வழங்குவதாக அவர் அந்த ஒலிநாடாவில் கூறியதாக தெரிவிக்கப்பட்டது.

இதன் தொடர்பான விசாரணையை ஊழல் தடுப்பு ஆணையம் நடத்தி வருகின்றது.

#TamilSchoolmychoice

ஆணையத்தின் விசாரணை முறையாக, நியாயமாக நடைபெற பிரதமர் விசாரணை முடியும் வரையில் விடுமுறையில் செல்ல வேண்டும் என இரண்டு வழக்கறிஞர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஐடில் காலிட் என்பவர் அதில் ஒருவர். மற்றொருவர் காத்ரி ஹனிப் ஆவார்.

நஜிப் பிரதமராக இருந்த காலகட்டத்தில் அவர் மீது 1எம்டிபி ஊழல் புகார்கள் சுமத்தப்பட்டன. அப்போது துணைப் பிரதமராக இருந்த மொகிதின் யாசின் 1எம்டிபி விவகாரம் குறித்த விசாரணைகள் முடியும் வரை நஜிப் விடுமுறையில் செல்ல வேண்டும் என்று கூறியிருந்தார். கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் 7ஆம் தேதி மொகிதின் யாசின் இதனைத் தெரிவித்திருந்தார்.

அந்த அறிக்கையை இரண்டு வழக்கறிஞர்களும் மேற்கோள்காட்டி இருக்கின்றனர்.

அன்று விசாரணைக்காக நஜிப் விடுமுறையில் செல்லவேண்டும் என அறைகூவல் விடுத்த மொகிதின் யாசின் இன்று தானும் அவ்வாறு பின்பற்ற வேண்டும் என்று ஐடில் காலிட் வலியுறுத்தியிருக்கிறார்.

ஐடில் காலிட் இதன் தொடர்பில் வெளியிட்ட அறிக்கையை ஹானிப் காத்ரி ஆதரித்திருக்கிறார்.

மேலும் தற்போது இருக்கும் தேசிய கூட்டணி அரசாங்கம் முழுமையுமே மொகிதின் யாசின் ஒலிநாடா தொடர்பில் எழுந்துள்ள புகார் உடன் தொடர்புடையது என்றும் அந்த இரண்டு வழக்கறிஞர்களும் தெரிவித்திருக்கின்றனர்.

எனவே அனைத்து அமைச்சரவை உறுப்பினர்களும் விடுமுறையில் செல்ல வேண்டும் என்றும் அந்த வழக்கறிஞர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.