துணைப் பிரதமர்களாக அன்வார் இப்ராகிமையும், தனது மகன் முக்ரிஸ் மகாதீரையும் முன்மொழிந்திருக்கிறார் மகாதீர்.
எப்போதுமே வித்தியாசமாகச் சிந்திக்கக் கூடியவர். புதுமையான பரிந்துரைகளை முன் வைப்பவர். முதலில் நடக்க முடியாத ஒன்று என அவரது பரிந்துரையை எல்லோரும் பரிகசிப்பார்கள்.
ஆனால் போகப் போக தனது திட்டத்தைக் கட்டமைத்து செயல் உருவாக்க அவர் முயற்சிகள் எடுப்பார். கால ஓட்டத்தில் அதைச் செயல்படுத்தியும் காட்டுவார். அவரது கடந்த கால வரலாறு நமக்குக் காட்டும் பாடம் இது!
இதற்குப் பல உதாரணங்களைக் காட்ட முடியும்!
14-வது பொதுத் தேர்தலுக்கு முன்பே மொகிதின் யாசினுடன் இணைந்து நஜிப்பின் ஊழல் அரசாங்கத்திற்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியவர் ஷாபி அப்டால். அதனால்தான் அவர் பிரதமர் பதவிக்குப் பொருத்தமானவர் என்கிறார் மகாதீர்.
பிகேஆர் இன்னும் அதிகாரபூர்வமான ஒப்புதலை வழங்கவில்லை.
நம்பிக்கைக் கூட்டணியின் செயலகக் கூட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை (ஜூலை 2) நடைபெறும் என பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் தெரிவித்திருக்கிறார். அந்தக் கூட்டத்தில்தான் நம்பிக்கைக் கூட்டணியின் தலைமைத்துவ மன்றம் எப்போது கூடும் என்ற முடிவு எடுக்கப்படும். தலைமைத்துவ மன்றத்தின் கூட்டத்தில்தான் மகாதீரின் பரிந்துரை குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் சைபுடின் நசுத்தியோன் தெரிவித்திருக்கிறார்.
மொகிதினை மகாதீர் வீழ்த்த முடியுமா?
ஆனால் இந்த முறை மகாதீரின் நகர்வு வெற்றியைக் கொடுக்குமா என்பது இரண்டு அம்சங்களைப் பொறுத்தே நிர்ணயிக்கப்படும்.
முதலாவது, சரவாக் ஜிபிஎஸ் எனப்படும் காபுங்கான் பார்ட்டி சரவாக் கட்சிகள் இந்தப் பரிந்துரையை ஆதரிக்குமா என்பது!
இரண்டாவது, பிகேஆர் கட்சி ஒத்துழைக்குமா? ஏற்றுக் கொள்ளுமா? என்பது!
சரவாக் ஜிபிஎஸ் கட்சிகளும் சரவாக் முதலமைச்சர் அபாங் ஜோஹாரியும் தொடர்ந்து மொகிதின் யாசினுக்குத் தங்களின் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.
நடப்பு நாடாளுமன்ற சூழ்நிலையில் மொகிதின் யாசினின் ஆட்சியைத் தாங்கிப் பிடித்திருப்பது சரவாக் மாநிலத்தின் ஆதரவுதான் என்பது தெளிவு.
மொகிதினுக்கு 114 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே இருக்கிறது. இதில் சரவாக் ஜிபிஎஸ் மட்டும் 18 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கிறது.
எனவே, ஷாபி அப்டாலின் பிரதமர் தேர்வுக்கு நம்பிக்கைக் கூட்டணி முழு ஆதரவு கொடுத்தாலும் சரவாக் ஜிபிஎஸ் கூட்டணியின் ஆதரவு இல்லாமல் அவர் பிரதமராக முடியாது
அன்வார் ஆதரிப்பாரா?
மகாதீருக்குப் பிறகு நான்தான் என இதுநாள்வரை கூறி வந்த அன்வார் இனி தரம் தாழ்ந்து ஷாபியைப் பிரதமராக ஏற்றுக் கொள்ள முன்வருவாரா என்பது சந்தேகம்தான்.
அப்படியே ஷாபியை ஏற்றுக்கொண்டாலும், தன்னை விட பன்மடங்கு இளையவரான முக்ரிஸ் மகாதீருக்கு சரி சமமாக துணைப் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டுத் தன்னைக் கேவலப்படுத்திக் கொள்வாரா?
அப்படிச் செய்யமாட்டார் என்றே அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
15-வது பொதுத் தேர்தலை நம்பிக்கைக் கூட்டணிக்குத் தலைமையேற்று சந்தித்து, வெற்றி பெற்று பிரதமராவதையே அவர் விரும்புவார் என்பதை அவர் கடந்த சில நாட்களாக வெளியிட்டு வரும் உரைகளும் அறிக்கைகளும் தெரிவிக்கின்றன.
அப்படியே அந்தப் வீரப் போராட்டத்தில் தோல்வியடைந்தாலும் அந்த ஜனநாயக முடிவுக்கு மதிப்பளித்து ஏற்றுக் கொள்ளும் மனநிலையில்தான் அன்வார் இருக்கிறார்.
எனவே, மகாதீரையே பிரதமராக ஏற்றுக் கொள்ளாத அன்வார், ஷாபியையும் ஏற்றுக் கொள்ளமாட்டார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. அவரது ஆதரவு இல்லாமல் ஷாபியை பிரதமராக்கும் மகாதீரின் கனவும் நிறைவேறாது.