Home One Line P1 அல்ஜசீரா மீது காவல் துறை விசாரணையைத் தொடங்கியது

அல்ஜசீரா மீது காவல் துறை விசாரணையைத் தொடங்கியது

413
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாட்டில் வெளிநாட்டினர் சம்பந்தப்பட்ட கொவிட்19 பாதிப்பைக் கையாளும் வகை, மலேசியாவை இழிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஆவணப்படம் வெளியானதைத் தொடர்ந்து அல்ஜசீராவின் அனைத்துலக ஊடகம் மீது காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கினர்.

குடிநுழைவுத் துறையிலிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களைத் தொடர்ந்து கோலாலம்பூர் காவல் துறையினரால் விசாரணை நடத்தப்பட்டதாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் துணை இயக்குநர் மியோர் பாரிடாலாத்ராஷ் வாஹிட் தெரிவித்தார்.

“ஜூன் தொடக்கத்தில் புத்ராஜெயா பிரின்சிங்க் 7 காவல் நிலையத்தில் நடைபெற்ற குடிநுழைவுத் துறையிலிருந்து பெறப்பட்ட காவல் துறை அறிக்கையைத் தொடர்ந்து இந்த விசாரணை நடைபெறுகிறது.

#TamilSchoolmychoice

“தண்டனைச் சட்டம் மற்றும் தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டத்தின் கீழ் ஒரு விசாரணைத் தொடக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணைகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன.” என்று அவர் தெரிவித்தார்.

இதே பிரச்சனையில் ஒரு நபரிடமிருந்து காவல் துறையருக்கு மற்றொரு அறிக்கை கிடைத்ததாக அவர் கூறினார்.

“இன்று (நேற்று) காலை 9 மணியளவில் புத்ராஜயா காவல் நிலையத்தில் ஒரு பெண் இந்த அறிக்கையை வெளியிட்டார்.

“புகார்தாரரின் புகாரை நாங்கள் ஏற்கனவே பதிவு செய்துள்ளோம். யூடியூபில் ஆவணப்படத்தைப் பார்த்த பிறகு அவர் இந்த புகார் அறிக்கையை வெளியிட்டார்.” என்று அவர் கூறினார்.

இதனிடையே, நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணைக் காலத்தில் ஆவணங்கள் இல்லாத வெளிநாட்டினருக்கு எதிரான சட்ட அமலாக்க நடவடிக்கைகள் மலேசியர்களின் விருப்பப்படி நடைபெற்றதாக உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடின் நேற்று தெரிவித்திருந்தார்.

“வெளிநாட்டு ஊடகப் பிரச்சனைகளைப் பற்றி நான் பேச விரும்பவில்லை. நாங்கள் மிகவும் கடுமையானவர்கள் என்று வெளிநாட்டு ஊடகங்கள் கூறினாலும், மக்கள் விரும்புவது இதுதான் என்று நான் நினைக்கிறேன்.

“இந்த நாட்டில் வாழும் அனைவரையும் நாட்டில் உள்ள சட்டங்களின்படி பார்க்க மக்கள் விரும்புகிறார்கள்.

“தவறு செய்தவர்களுக்கு எதிராக ஒரு வலுவான அரசாங்கம் தேவை”. என்று அவர் கூறியிருந்தார்.

ஆவணமற்ற வெளிநாட்டினருக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளும் தேசிய சட்டத்தின்படி எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

“கதைகளை சித்தரிக்க விரும்பும் வெளிநாட்டு ஊடகங்களைப் பற்றி பேசக்கூடாது.

“என்னைப் பொறுத்தவரை நாங்கள் அதை சட்டத்தின்படி செய்கிறோம். நடைமுறைப்படி, அவர்களை நடைமுறைக்கு ஏற்ப கைது செய்கிறோம்.

“தவறு செய்யும் எவரையும் நாங்கள் கைது செய்யும்போது, ​​அவர்களை நம் நாட்டின் சட்டங்களுக்குக் கொண்டு வர வேண்டும்.” என்று அவர் மேலும் கூறினார்.

கொவிட் 19 நடவடிக்கையை மலேசியா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்ததால், சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு சேவை செய்வதில் பாகுபாடு காட்டுவதாக 20.25 நிமிடங்கள் கொண்ட ‘லோக்ட் ஆப் இன் மலேசியாஸ் லோக்டவுன்’ என்ற காணொளி அறிக்கையில் அல்ஜசீரா கூறியது.

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் போது அதிகாரிகள் வெளிநாட்டினரைக் கொடுமைப்படுத்தியதாக அந்த அறிக்கை கூறியுள்ளது.

இதே போல், ஆவணமற்ற புலம்பெயர்ந்தோருக்கு எதிராக அரசாங்கம் கடுமையாக நடந்து கொண்டது என்று சித்தரிக்கும் ஆவண அறிக்கைகளை தயாரித்த அல்ஜசீரா செய்தி நிறுவனம் நெறிமுறையற்றது என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் குற்றம் சாட்டினார்.

அல்ஜசீரா ஆவணப்படம் ஒரு பொய் என்று அவர் நேற்றைய தமது செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.

“இந்தக் கொள்கை அனைவருக்கும் பொருந்தும். நாங்கள் இனவெறியுடன் செயல்படுகிறோம் என்று குற்றம் சாட்டுவதும் உண்மையல்ல. தடுத்து வைத்தது சட்டபூர்வமானது. சரியான ஆவணங்கள் இல்லாதவர்களை கைது செய்ய மலேசியாவின் குடிநுழைவுத் துறை சட்டத்தைப் பயன்படுத்துகிறது.” என்று அவர் கூறினார்.

செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் இல்லாத வெளிநாட்டினரை அனுமதிக்கும் ஒரு நாட்டைக் குறிப்பிடுமாறு அல்ஜசீராவுக்கு இஸ்மாயில் சவால் விடுத்திருந்தார்.

மேலும், இந்த அறிக்கைக்கு மலேசியர்களிடம் மன்னிப்பு கேட்குமாறு அல்ஜசீராவை இஸ்மாயில் வலியுறுத்தினார்.