Home One Line P1 “செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் புத்துயிர் பெற்றது”

“செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் புத்துயிர் பெற்றது”

901
0
SHARE
Ad

கோலாலம்பூர் – தமிழைச் செம்மொழியாக அங்கீகரித்த இந்திய நடுவணரசு, இப்பொழுது அதற்கான நிறுவனமான செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்திற்கு ஓர் இயக்குநரை நிரந்தர அமர்த்தம் செய்திருப்பதை, உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கம் மனமுவந்து வரவேற்கிறது என உலகத் தமிழ்ப் பண்பாட்டியக்கத் தலைவர் திரு. ப.கு.சண்முகம் கூறினார்.

இயக்குநர் நியமனம் பற்றிக் குறிப்பிட்ட திரு.ப.கு.சண்முகம், ஓர் இயக்கம் வகுத்துக் கொண்ட குறிக்கோள் நிறைவேறத் துடிப்பு மிக்க அதன் இயக்குநரே வழிவகுக்க இயலும். அவ்வகையில் இயக்குநராகியுள்ள முனைவர் இரா.சந்திரசேகரர் (படம்), 47 அகவை கொண்ட பேராசிரியர். அதனால் நாம் எதிர் பார்க்கும் துடிப்பும் செயல்திறனும் மொழி வளர்ச்சில் நாட்டமும் கொண்டவர் என்று நம்பலாம் என்றார் சண்முகம்.

“இன்று தமிழ், இந்திய நாட்டின் எல்லையோடு அடங்கிவிடவில்லை. அது உலகின் பல நாடுகளில் பயன்பாட்டில் உள்ள மொழியாக உள்ளது. ஆஸ்திரேலியா, ஜெர்மனி போன்ற நாடுகளில் அரசு அங்கீகாரம் பெற்ற மொழியாகத் திகழ்கிறது. சிங்கப்பூரின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக விளங்குகிறது. மலேசியாவில் கல்வி மொழிகளில் ஒன்றாக – தமிழ்ப் பள்ளிகளில் கற்பிக்கும் மொழியாக வாழ்ந்து வருகிறது. உயர் கல்வி நிலையங்களில் சங்க இலக்கியம் உள்ளிட்ட தமிழ் இலக்கியம் தேர்வுப் பாடங்களில் இடம் பெறுகிறது. ஆகவே தமிழ் – தமிழ் இலக்கியம் உலகளாவிப் பரவ இந்திய நடுவணரசு ஒப்பிசைவு அளித்துள்ள நிலையில் செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் அதற்காக தனது கருத்தைச் செலுத்த வேண்டும்” என்றும் உலகத் தமிழ்ப் பண்பாட்டியக்கம் சார்பில் வெளியிட்ட அறிக்கையொன்றில் ப. கு. சண்முகம் கூறினார்.

#TamilSchoolmychoice

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் மலேசிய அமைப்பு இர. ந. வீரப்பன் தலைமையில் (நாற்பதாண்டுகளுக்கு முன்) நிறுவப்பட்டது.

அப்போதிருந்து உறுப்பினர் பொறுப்பிலும் செயலவையிலும் இடம் பெற்றுவரும் முனைவர் முரசு நெடுமாறன் (படம்), இயக்கத்தின் துணைத் தலைவராவார். அவர் நீண்ட நெடுங்காலமாக இயக்கத்தின் ஆதரவோடு இலவசமாகத் தமிழ், தமிழ் இலக்கிய வகுப்புகளும் பயிலரங்குகளும் நடத்தியுள்ளார். உயர் நிலை மாணவர்களுக்குச் சங்க இலக்கியம் கற்பித்துள்ளார். வானொலி வழியும் இலக்கிய நாடகங்கள் படைத்துள்ளார். மலாயாப் பல்கலைக் கழகத்திலும் சங்க இலக்கியம் கற்பிக்கப்படுகிறது.

அதனால் இங்கு சங்க இலக்கியம் இளந்தலைமுறையினரிடையே இன்றும் பரவி வருகிறது. உலகத் தமிழ்ப் பண்பாட்டியக்கம் இத்தகைய செயல்பாடுகளுக்கெல்லாம் பேராதரவு தந்து வருகிறது.

செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்திற்கு இப்பொழுது இயக்குநர் நியமனம் ஆகியுள்ளாராதலால், இங்குத்  தமிழ் வளர்ச்சிக்கும், செம்மொழிப் பரவலுக்கும் செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் ஊக்குதல் வழங்கும் என நம்பலாமென மலேசிய, உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்க தலைவர் சண்முகம் நம்பிக்கை தெரிவித்தார்.

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநராக ஆர்.சந்திரசேகரன்

செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்ட இரா. சந்திரசேகரன் தனது பொறுப்பை ஏற்றுக் கொண்ட பின்னர் தமிழகத்தின் இந்து ஊடகத்திற்கு அண்மையில் வழங்கிய பேட்டியில் கிரேக்க, இலத்தீன் போன்ற மற்ற செம்மொழிகளுடன் தமிழ் மொழியை ஒப்பாய்வு செய்யும் பணிகள் தொடங்கப்படும் எனத் தெரிவித்தார்.

செம்மொழி நிறுவனத்தின் முதல் நிரந்தர இயக்குநராக சந்திரசேகரன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இந்தப் பொறுப்பை ஏற்பதற்கு முன்னர் காங்கேயம், முள்ளிப்புரத்தில் அமைந்திருக்கும் அரசாங்க கலை, அறிவியல் கல்லூரியின் துணைப் பேராசிரியராக அவர் பணியாற்றி வந்தார்.

செம்மொழித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு இந்திய மனிதவள அமைச்சுடனும் மாநில அரசாங்கத்துடனும் இணைந்து அவர்களின் ஆதரவுடன் பாடுபடப் போவதாகவும் சந்திரசேகரன் உறுதியளித்தார்.

பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே தமிழ் மொழி மீதான ஆர்வத்தை வளர்ப்பதற்கு கருத்தரங்கங்கள், மாநாடுகளையும், தமிழகக் கல்வி நிலையங்களில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் நடத்தும் எனவும் சந்திரசேகரன் கூறியிருக்கிறார்.

47 வயதான சந்திரசேகரன் கற்பித்தல், தமிழ் மொழி ஆய்வுகள் தொடர்பில் பரந்த அனுபவத்தைக் கொண்டிருக்கிறார். முள்ளிப்புரம் துணைப் பேராசியராகப் பொறுப்பேற்பதற்கு முன்னர் நாமக்கல், உதகமண்டலம் போன்ற பகுதிகளில் உள்ள அரசாங்கக் கல்லூரியில் சந்திரசேகரன் பணியாற்றியிருக்கிறார்.

சங்க காலத் தமிழ் இலக்கியங்களையும் பழந்தமிழ் படைப்புகளையும் ஆராய்ச்சி செய்த திறனையும், அனுபவத்தையும் சந்திரசேகரன் கொண்டிருக்கிறார். இந்தியக் கலாச்சார, மொழி ஆய்வுகள், பக்தி இலக்கியம், பழங்குடியினர் இலக்கியங்கள் ஆகியவை குறித்த ஆய்வுகளையும் சந்திரசேகரன் மேற்கொண்டிருக்கிறார்.

2013-ஆம் ஆண்டில் இளம் கல்வி ஆய்வாளர் விருதை அப்போதைய இந்திய அதிபர் பிரணாப் முகர்ஜியிடம் இருந்து சந்திரசேகரன் பெற்றுள்ளார்.

செம்மொழித் தமிழாய்வு நிறுவனம்

தமிழ் மொழியின் பழம் பெருமையை நிலைநாட்டி, ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும் நோக்கிலும் உலக அளவில் தமிழ் மொழியைப் பரப்புவதற்கும் உருவாக்கப்பட்டிருக்கும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் 2008 முதல் சென்னையில் இயங்கி வருகிறது.

இந்திய மனிதவள அமைச்சின் மேற்பார்வையில் இந்த நிறுவனம் செயல்படுகிறது.

தமிழ் மொழி அறிஞர்களுக்கும் ஆய்வாளர்களுக்குமான விருதுகளையும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் அறிவித்திருக்கிறது.

அதன்படி, இந்தியாவைச் சேர்ந்த கல்வியாளர்/அறிஞர் ஒருவருக்கு தொல்காப்பியர் விருது வழங்கப்படும். 500,000 ரூபாய் சன்மானத்தைக் கொண்டது இந்த விருது. இந்திய அதிபரால் இந்த விருது வழங்கப்படும்.

“குறள் பீடம்” என்ற விருது இருவருக்கு வழங்கப்படும். அயல்நாடுகளில் வாழும் தமிழ் அறிஞர்/கல்வியாளர் ஒருவருக்கும் அயல்நாடுகளில் வசிக்கும் இந்தியக் குடியுரிமை பெற்ற ஒருவருக்கும் இந்த விருது வழங்கப்படும். தலா 500,000 ரூபாய் சன்மானத்தைக் கொண்டது இந்த விருது.

இளம் கல்வி ஆய்வாளர் விருது ஐவருக்கு வழங்கப்படும். அவர்கள் 30 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் தலா 100,000 ரூபாய் சன்மானம் வழங்கப்படும்.

இந்த விருதுகளுக்கான பரிந்துரைகளைச் சமர்ப்பிக்க வேண்டிய இறுதி நாள் ஜூலை 15 ஆகும்.

கூடுதல் விவரங்களைக் கீழ்க்காணும் வலைத் தளத்தில் பெறலாம்:

https://www.cict.in/index_english.php