Home One Line P1 அன்வார் காலை 11 மணிக்கு மாமன்னரைச் சந்திக்கிறார்

அன்வார் காலை 11 மணிக்கு மாமன்னரைச் சந்திக்கிறார்

350
0
SHARE
Ad

கோலாலம்பூர் : பிகேஆர் கட்சித் தலைவரும், நம்பிக்கைக் கூட்டணி தலைவருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் ஏற்கனவே நிர்ணயித்தபடி இன்று செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 13) காலை 11.00 மணிக்கு மாமன்னரைச் சந்திப்பார் என ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

எனினும் இதுகுறித்த அதிகாரத்துவ தகவல்கள் எதுவும் இதுவரை அரண்மனை தரப்பிலிருந்து அறிவிக்கப்படவில்லை.

அன்வார் மாமன்னரைச் சந்திப்பதற்கான நேரம் இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை என பிகேஆர் கட்சியின் தொடர்புப் பிரிவின் இயக்குநர் பாஹ்மி பாட்சில் தெரிவித்ததாக ஸ்டார் ஊடகச் செய்தி தெரிவித்தது.

#TamilSchoolmychoice

மாமன்னரைச் சந்தித்த பின்னர் அன்வார் பத்திரிகையாளர் சந்திப்பு எதனையும் நடத்துவாரா என்பது குறித்தும் இதுவரையில் அறிவிக்கப்படவில்லை.

அன்வாரின் காவல் துறை விசாரணை ஒத்திவைப்பு

இதற்கிடையில் அன்வாரை ஆதரிப்பதாகக் கூறும் நாடாளுமன்ற வேட்பாளர்கள் பட்டியல் குறித்து இதுவரையில் 6 புகார்கள் காவல் துறையில் செய்யப்பட்டிருக்கின்றன.

இதன் தொடர்பில் அன்வாரை விசாரிக்க புக்கிட் அமான் காவல் துறை தலைமையகத்திற்கு வருகை தரும்படி அவருக்கு உத்தரவிட்டுள்ளது.

இன்று அன்வார் காவல் துறைக்கு செல்வதாக நேற்று தகவல்கள் வெளியாகின. எனினும் தற்போது காவல் துறையினருடனான அன்வாரின் சந்திப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஹூசிர் முகமட் அந்த அறிவிப்பை அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்தார்.

அன்வாரின் காவல் துறை விசாரணை இன்றைக்கு நடைபெறவிருந்த நிலையில் அதனைத் தாங்கள் தற்போதைக்கு ஒத்தி வைத்துள்ளதாக ஹூசிர் முகமட் குறிப்பிட்டார்.

121 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அன்வாரின் பட்டியல் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டு வருகிறது.

அந்தப் பட்டியலில் இடம் பெற தாங்கள் ஒப்புதல் அளிக்கவில்லை என சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் காவல் துறையில் புகார் செய்தனர்.

அதைத் தொடர்ந்தே அன்வார் காவல் துறை விசாரணைக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்.