Home கலை உலகம் “தி பேமிலி மேன்-2” – தடை செய்ய வைகோ மத்திய அரசாங்கத்திற்கு கடிதம்

“தி பேமிலி மேன்-2” – தடை செய்ய வைகோ மத்திய அரசாங்கத்திற்கு கடிதம்

811
0
SHARE
Ad

 

சென்னை : “தி பேமிலி மேன்-2” தொடரின் இரண்டாவது பருவம் (சீசன் 2) எதிர்வரும் ஜூன் 4-ஆம் தேதி அமேசோன் பிரைம் கட்டண வலைத் திரையில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்தத் தொடருக்கான முன்னோட்டமும் வெளியாகியிருக்கிறது.

“தி பேமிலி மேன்” தொடரின் முன்னோட்டம் மே 19-ஆம் தேதி வெளியிடப்பட்டது. 5 நாட்களில் 41 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்த்திருக்கிறது அந்த முன்னோட்டம்.

#TamilSchoolmychoice

முன்னோட்டத்தின்படி தொடரின் சம்பவங்கள் சென்னையில் நடைபெறுவது போல சித்தரிக்கப்பட்டிருக்கின்றன.

அதோடு, சமந்தாவை விடுதலைப் புலி வீராங்கனை போல் சித்திரித்திருக்கிறார்கள். அவரின் நடை, உடை, பாவனைகளும் ஒரு விடுதலைப் புலி வீராங்கனையை ஒத்திருக்கிறது.

இதனால் தமிழர்களுக்கோ, விடுதலைப் புலிகளுக்கோ எதிரான கதையை தி பேமிலி மேன் தொடர் கொண்டிருக்கிறதா என்ற கேள்விகளும் சர்ச்சைகளும் தமிழக ஊடகங்களில் எழுந்துள்ளன.

தமிழர்களைத் தவறாகச் சித்தரிப்பதால் அந்தத் தொடரைத் தடை செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

அவரைத் தொடர்ந்து மதிமுக பொதுச் செயலாளரும், இந்திய நாடாளுமன்ற மேலவையின் உறுப்பினருமான வைகோ இந்திய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சரான பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். தி பேமிலி மேன் தொடரைத் தடை செய்ய வேண்டும் என  அந்தக் கடிதத்தில் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

9 பாகங்களாக வெளிவரப்போகும் இந்தத் தொடருக்கான எதிர்பார்ப்புகளும் ஆர்வமும் உலகத் தமிழர்களிடையே அதிகரித்திருக்கின்றன. குறிப்பாக, பல நாடுகளில் பரவிக் கிடக்கும் இலங்கைத் தமிழர்களும் கண்டிப்பாக இந்தத் தொடரைப் பார்க்க ஆர்வம் காட்டுவார்கள்.

இதனால் இந்தத் தொடருக்கு மிகப் பெரிய விளம்பரம் கிடைத்திருக்கிறது.

இந்தத் தொடரை உருவாக்கியிருப்பவர்கள் ராஜ் மற்றும் டி.கே. என்ற இருவர். அண்மையில் இவர்கள் அளித்த ஊடகப் பேட்டியில் வட்டார மொழி பேசுவதற்கும் சண்டைக் காட்சிகளில் நடிப்பதற்கும் சமந்தா பிரத்தியேகப் பயிற்சிகளை மேற்கொண்டார் எனத் தெரிவித்திருக்கிறார்கள்.

அதோடு தங்களின் படைப்புக் குழுவிலும் கதையமைப்புக் குழுவிலும் தமிழர்கள் முக்கியப் பங்காற்றினர் என்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

“தமிழர்கள் மீதும் அவர்களின் கலாச்சாரம் மீது எங்களுக்கு அன்பும் மரியாதையும் இருக்கிறது. எனவே, முழுத் தொடரையும் பார்த்து முடித்துவிட்டு கருத்து சொல்லுங்கள். அப்போதுதான் எங்களின் கதாபாத்திரச் சித்தரிப்பையும், நடுநிலைக் கண்ணோட்டத்தையும் நிச்சயம் பாராட்டுவீர்கள்” என்றும் இந்தத் தொடரை உருவாக்கியிருக்கும் ராஜ், டிகே இருவரும் தெரிவித்திருக்கிறார்கள்.

எனினும் தி பேமிலி மேன், அமேசோன் பிரைம் கட்டண வலைத் திரையில் ஒளியேறும்வரை சர்ச்சைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

“தி பேமிலி மேன்”வலைத் தொடரின் முன்னோட்டத்தைக் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்: