Home நாடு கொவிட்-19: ஒருநாளில் 57-ஆக மரணங்கள் குறைந்தன; புதிய தொற்றுகள் 5,218

கொவிட்-19: ஒருநாளில் 57-ஆக மரணங்கள் குறைந்தன; புதிய தொற்றுகள் 5,218

1019
0
SHARE
Ad

noor-hisham-health-min-07072020கோலாலம்பூர்: இன்று திங்கட்கிழமை ஜூன் 28 வரையிலான ஒரு நாளில் நாடு முழுமையிலும் 57 மரணங்கள் பதிவாகியிருக்கின்றன. நேற்றைய எண்ணிக்கையான 60-உடன் ஒப்பிடும்போது இது குறைந்திருக்கிறது என்றாலும் மரண எண்ணிக்கை இன்னும் கணிசமான அளவில் இருந்து வருகிறது.

கடுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலில் இருக்கும் காலத்திலும் நாட்டில் கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கையும், மரண எண்ணிகையும் தொடர்ந்து கணிசமான அளவில் நீடித்துக் கொண்டிருக்கின்றன.

இன்றைய மரணங்களைத் தொடர்ந்து நாட்டில் பதிவாகியிருக்கும் மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை ஐயாயிரத்தைக் கடந்து 5,001 ஆக உயர்ந்தது.

#TamilSchoolmychoice

மரணமடைந்தவர்களில் ஆண்கள் 41 பேர், பெண்கள் 16 பேர். மரணமடைந்தவர்களில் நால்வர் மரணத்துக்குப் பின்னரே மருத்துவமனைகளுக்குக் கொண்டுவரப்பட்டனர்.

இன்று திங்கட்கிழமை வரை (ஜூன் 28) அமுலில் இருந்து வந்த முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

இதனை முன்னிட்டு பிரதமர் மொகிதின் யாசின் 150 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள நிதி உதவித் திட்டங்களை இன்று அறிவித்தார்.

இதற்கிடையில் இன்று திங்கட்கிழமை (ஜூன் 28) வரையிலான மொத்த ஒருநாள் கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை 5,218 என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இன்றைய எண்ணிக்கையோடு சேர்ந்து நாட்டில் இதுவரை பதிவான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 739,266 ஆக உயர்ந்திருக்கிறது.

மொத்தம் பதிவான 5,218 தொற்று சம்பவங்களில் 5,211 தொற்றுகள் உள்நாட்டிலேயே பரவியதாகும். 7 தொற்றுகள் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களால் பரவியதாகும்.

கொவிட் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை ஒரு நாளில் 4,744 -ஆக பதிவாகி உள்ளது. இதைத் தொடர்ந்து இதுவரையில் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 672,453 -ஆக உயர்ந்திருக்கிறது.

கடந்த ஒரு நாளில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 61,812 எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவர்களில் 899 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 451 பேருக்கு சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை வழங்கப்படுகிறது.

மாநிலங்களைப் பொறுத்தவரையில் சிலாங்கூர் 1,989 தொற்றுகளோடு மிக அதிகமான தொற்றுகளைப் பதிவு செய்திருக்கிறது.

அதற்கு அடுத்த நிலையில் 629 தொற்றுகளோடு நெகிரி செம்பிலான் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. மூன்றாவது இடத்தை 469 தொற்றுகளோடு கோலாலம்பூர் பதிவு செய்திருக்கிறது.

சரவாக் 409 தொற்றுகளைப் பதிவு செய்திருக்கிறது.