Home Photo News “ஆட்சி மாற்றம் சாத்தியமா? இன அரசியலைத் தவிர்க்க முடியுமா?” டத்தோ மு.பெரியசாமியின் அரசியல் பார்வை

“ஆட்சி மாற்றம் சாத்தியமா? இன அரசியலைத் தவிர்க்க முடியுமா?” டத்தோ மு.பெரியசாமியின் அரசியல் பார்வை

836
0
SHARE
Ad

(பினாங்கு மாநிலத் தகவல் இலாகாவின் முன்னாள் இயக்குனரும், தகவல் அமைச்சின் ஊடகத்துறையின் முன்னாள் தலைமை அதிகாரியும், அரசியல் ஆய்வாளருமான டத்தோ மு.பெரியசாமி, “ஆட்சி மாற்றம் சாத்தியமா?” என்ற கண்ணோட்டத்தில் வழங்கும் அரசியல் பார்வை)

மலேசியாவில் பல்லின மக்களைப் பிரதிநிதிக்கும் முதன்மை அரசியல் கட்சிகளாக பி.கே.ஆரும் ஜசெகவும் விளங்குகிறது என்றால் மிகையாகாது. கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் நடந்த 14-ஆவது பொதுத் தேர்தலில் நாட்டிலுள்ள 222 நாடாளுமன்ற தொகுதிகளில் இவ்விரு கட்சிகளும் 90 இடங்களில் வெற்றிப் பெற்று இதர இன ரீதியிலான ஒரு சில கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து ஆட்சி அமைத்தது.

நாட்டின் முதல் பொதுத் தேர்தலிலிருந்து தொடர்ந்து 60 ஆண்டு காலம் ஆட்சி செய்து வந்த பாரிசான் நேஷனல் எனப்படும் தேசிய முன்னணி அரசாங்கத்தைத் தோற்கடித்துப் பக்கத்தான் ஹாராப்பான் என்ற பல்லின மக்களைப் பிரதிநிதிக்கும் அரசாங்கத்தை அமைத்தது அனைவரும் அறிந்ததே.

கட்டுரையாளர் டத்தோ மு.பெரியசாமி

அதே வேளையில் இன ரீதியிலான குறிப்பாக மலாய்க்காரர் சமூகத்தைப் பிரதிநிதிக்கின்ற கட்சிகள் எனக் கருதப்படும் அம்னோ வெறும் 54 தொகுதிகளையும் பாஸ் 18 தொகுதிகளையும் ஆக மொத்தம் 72 தொகுதிகளில்தான் அந்தக் கட்சிகளால் வெற்றிப் பெற முடிந்தது.

#TamilSchoolmychoice

கடந்த 14-ஆவது பொதுத்தேர்தலில் நம்பிக்கைக் கூட்டணியிலுள்ள கட்சிகளுக்கு 95% சீன வாக்காளர்களும், 70 முதல் 75 விழுக்காட்டு இந்திய வாக்காளர்களும் இதுநாள் வரை அம்னோவுக்கு ஆதரவாக இருந்தவர்களில் 25 முதல் 30 விழுக்காட்டு மலாய் வாக்காளர்களும் பக்கத்தானுக்கு வாக்களித்தனர் என்று ஆய்வறிக்கை காட்டுகின்றது.

இவ்வாய்வின் முடிவுகள் மலேசியர்கள் இன ரீதியிலான அரசியலை விட்டு விலகி மெல்ல பல்லின அரசியலுக்கு நகருவதைக் காட்டியது எனலாம். நடந்தேறிய பொதுத் தேர்தலில் ஜசெகவும், பி.கே.ஆரும் பெரும்பாலான தொகுதிகளில் வென்றதால் இக்கட்சியைச் சார்ந்தவர்களே பெரும்பாலான அரசாங்கப் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டனர்.

இந்த நியமனங்கள் பொதுவாகத் தேர்தலில் முதன்மை இடத்தில் வெற்றிப் பெறுகின்ற அல்லது பெரும்பாலான தொகுதிகளை வென்ற கட்சிகளுக்கு வழங்கப்படுவது ஓர் அரசியல் மரபு. இருப்பினும் இந்தப் பெரும்பாலான அரசு நியமனங்களில் மலாய் சமூகத்தின் ஆதிக்கம் குறைந்து விட்டதாக மலாய் சமூகம் கருதியது. அதனால் கட்சி வேறுபாடின்றி பெரும்பாலான மலாய்க்காரர்கள் நாட்டின் அரசியலில் தொன்றுதொட்டு பசுமரத்தாணிபோல் வேரூன்றி வந்த மலாய் ஆதிக்கம் குறைவதாகவும் கருதத் தொடங்கினர்.

இந்த உணர்வின் தொடர்பாக நாட்டின் அரசியலிலே மலாய் ஆதிக்கத்தை மீண்டும் நிலை நிறுத்தும் நோக்கத்தில் இன ரீதியில் இயங்கி வருகின்ற அம்னோவும் பாஸ் கட்சியும் முவபக்கட் (muafakat) என்ற அரசியல் கூட்டணியைத் தொடக்கியது. மலாய் சமூகத்தை ஒன்றுபடுத்தி அவர்களின் அரசியல் ஆதிக்கத்தை மீண்டும் நிலைநிறுத்தும் நோக்கத்தில் துன் டாக்டர் மகாதீர் முகமட்டும் மலாய் டிக்னிடி காங்கிரஸைக் கூட்டினார்.

இம்மாபெரும் கூட்டத்திற்கு இன ரீதியில் இயங்கி வருகின்ற மலாய் அரசியல் கட்சிகளே அழைக்கப்பட்டன. இக்கூட்டத்திற்குப் பல்லின கட்சி எனக் கருதப்படும் பி.கே.ஆர். அழைக்கப்படவில்லை. மேற்கூறிய நடவடிக்கைகள் டி.ஏ.பி.க்குப் பெரும் அதிர்ச்சியைத் தந்தது. நம்பிக்கைக் கூட்டணி தலைமைத்துவத்தில் ஒரு சலசலப்புத் தோன்ற ஆரம்பித்தது.

மகாதீருக்குத் தரப்பட்ட நெருக்குதல்

இதைத் தொடர்ந்து, 21.2.2020 -ல் நடந்த நம்பிக்கைக் கூட்டணி நிருவாகக்குழுக் கூட்டத்தில் துன் மகாதீர் ஏற்கெனவே வாக்குறுதியளித்த பிரதமர் பதவி தொடர்பான பிரச்சனையைப் பி.கே.ஆர் தலைவர்கள் கொண்டு வந்து துன் மகாதீருக்கு பெரும் நெருக்குதல் தந்தனர்.

இச்சம்பவம் நம்பிக்கைக் கூட்டணி கட்சிகளிடையே ஓர் இக்கட்டான அரசியல் சூழ்நிலையை உருவாக்கியது. இதனால், நம்பிக்கைக் கூட்டணி ஆட்சி ஒரு புதிய திருப்பத்தை எதிர் நோக்கியது எனலாம்.

23.2.2020-ல் அம்னோ கட்சியும் பெர்சத்து கட்சியும் தங்களின் மத்தியச் செயலவைக் கூட்டத்தைத் தனித்தனியே கூட்டி, மலாய் சமூகத்தை உண்மையாகப் பிரதிநிதிக்கின்ற ஒரு மாற்று அரசாங்கத்தை அமைக்கக் கருத்துப்பரிமாற்றம் செய்தன.

பெர்சத்து கட்சியும் மலாய்க்காரர்களின் எண்ண ஓட்டங்களுக்கு ஏற்ப ஒரு புதிய அரசாங்கத்தை அமைக்கவும், அந்தப் புதிய அரசாங்கத்தை அறிவிக்கும் தேதியையும்  அப்புதிய அரசாங்கத்திற்குத் துன் டாக்டர் மகாதீரே பிரதமராக இருக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டன.

மகாதீரின் திடீர் பதவி விலகல்

இதற்கிடையே துன் மகாதீர் ஏதோ ஒரு சில காரணங்களுக்காகத் திடீரெனத் தனது பெர்சத்து கட்சியின் தலைவர் (chairman ) பதவியையும் பிரதமர் பதவியையும் ராஜினாமா செய்தது நாட்டையும் பக்காத்தான் நம்பிக்கைக் கூட்டணி கட்சியையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இவ்வேளையில் பெர்சாத்து கட்சியின் தலைவராக இருந்த மொகிதின் யாசின் காலியான பெர்சத்து கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றதோடு, பெர்சத்து கட்சி நம்பிக்கைக் கூட்டணியிலிருந்து விலகுவதாக அதிரடி அறிவிப்புச் செய்தார்.

இந்த அறிவிப்பு நம்பிக்கைக் கூட்டணியின் சிதைவுக்கு காரணமாக அமைந்ததோடு பி.கே.ஆர் கட்சிக்குப் பேரிடியாக அமைந்தது. நம்பிக்கைக் கூட்டணியிலிருந்து பெர்சத்து விலகியதால் நம்பிக்கைக் கூட்டணி நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தது. இது ஓர் ஆட்சி மாற்றம் உருவாகும் சூழ்நிலையை உருவாக்கியது.

இவ்வேளையில், பிரதமர் பதவியிலிருந்து மகாதீர் விலகியதால் அந்தப் பதவிக்கு மொகிதின் யாசினைப் பரிந்துரை செய்தன மலாய்க்கார ஆதிக்கத்தை மீண்டும் கொண்டுவர நினைக்கும் அம்னோ, பாஸ் மற்றும் இதர தேசிய முன்னணி கட்சிகள்.

இதே மலாய் மனோபாவத்துடன் பி.கே.ஆர் கட்சியைச் சேர்ந்த 11 உறுப்பினர்கள் திடீரென கட்சியிலிருந்து விலகி மொகிதினுக்கு ஆதரவு தந்தனர். இந்தக் கூட்டுச் சேர்க்கையால் பெர்சத்து கட்சியைத் தலைமை தாங்குகின்ற மொகிதின் யாசினுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு கிட்டியது.

நாடாளுமன்றத்தில் மொகிதினுக்கு பெரும்பான்மை ஆதரவு உள்ளதாகக் கண்டறிந்தப் பேரரசர் மொகிதினை 8 ஆவது பிரதமராக நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு அறிவித்தார்.

பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்ட மொகிதின், பெரிக்கத்தான் நேஷனல் என்ற தேசியக் கூட்டணியின் புதிய அரசாங்கத்தைக் கடந்த மார்ச்சு 2020-இல் அமைத்தார்.அதோடு பல்லின அரசியல் கட்சிகளால் அமைக்கப்பட்ட பக்கத்தான் அரசாங்க ஆட்சியும் ஒரு முடிவுக்கு வந்தது.

ஆகவே, இந்நாட்டில் பெரும்பான்மை மக்களும் வாக்காளர்களுமாகிய மலாய் சமூகத்தின் ஆதிக்கத்தைப் பிரதிபலிக்காத எந்த அரசாங்கமும் நிலைப்பது எளிதல்ல என்பதை மேற்கூறிய ஆட்சி மாற்றம் தெளிவாகக் காட்டுகிறது.

மலேசியாவில் இன ரீதியான அரசியல் தவிர்க்கப்பட்டு பல்லின அரசியலைக் கொண்ட ஒரு முதிர்ச்சியடைந்த ஒரு ஜனநாயகம் மலர இன்னும் பல காலம் ஆகுமென்பதே எனது கருத்தாகும்.

-டத்தோ மு. பெரியசாமி.