Home நாடு நாடாளுமன்றக் கூட்டத் தொடர் சுமுகமாக நடைபெறுமா? போர்க்களமாகுமா?

நாடாளுமன்றக் கூட்டத் தொடர் சுமுகமாக நடைபெறுமா? போர்க்களமாகுமா?

477
0
SHARE
Ad

கோலாலம்பூர் : பெரும் எதிர்பார்ப்புக்கிடையில் இன்று திங்கட்கிழமை (ஜூலை 26) காலை 10.00 மணிக்குத் தொடங்கியுள்ள 5 நாள் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் சுமுகமாக நடைபெறுமா? அல்லது அரசியல் கட்சிகளுக்கு இடையிலான இன்னொரு போர்க்களமாக மாறுமா?

மக்களுக்குப் பயனான விதத்தில் இன்று தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் விவாதங்கள் அமையுமா?

என்பது போன்ற கேள்விகள் மக்களிடத்திலும், அரசியல் பார்வையாளர்களிடையே எழுந்துள்ளன.

#TamilSchoolmychoice

அவசர கால சட்டங்களை இரத்து செய்யக் கோரும் தீர்மானங்கள் எதிர்க்கட்சிகளால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன. இந்த தீர்மானங்கள் அனுமதிக்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

காரணம் இது சிறப்புக் கூட்டம் என வகைப்படுத்தப்பட்டிருக்கின்றது. எனவே, வெறும் விளக்கங்களாக அமையுமா அல்லது வழக்கமான நாடாளுமன்றக் கூட்டம் போல் நடத்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

நடப்பிலிருக்கும் அவசர கால சட்டங்கள் ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்குப் பின்னர் நீட்டிக்கப்படும் நிலையை ஏற்பட்டால் அம்னோவின் அமைச்சர்கள், துணை அமைச்சர்கள், அரசாங்க நிறுவனங்களின் தலைவர்கள் என அனைவரும் அரசாங்கத்திலிருந்து விலகுவர் என சாஹிட் ஹாமிடி கூறியுள்ளார்.

விவாதங்களுக்கு அனுமதி இல்லையென்றால் பெஜூவாங் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்வர் என அந்தக் கட்சியின் தலைவர் துன் மகாதீர் முகமட் அறிவித்திருக்கிறார்.

நிராகரிக்கப்பட்ட அன்வார் இப்ராகிமின் தீர்மானங்கள்

இதற்கிடையில், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் சமர்ப்பித்த தீர்மானங்களை அவைத் தலைவர் அசார் அசிசான் ஹாருண் நிராகரித்திருப்பதும் சர்ச்சையாகியிருக்கிறது.

அவசரகாலச் சட்டங்கள் குறித்து அன்வார் இப்ராகிம் சமர்ப்பித்த தீர்மானங்கள் ஜூலை 12-ஆம் தேதியே அனுப்பப்பட்டது என அசார் ஹாருண் தெரிவித்திருக்கிறார். ஆனால் நாடாளுமன்றக் கூட்டத்திற்கான முன் அறிவிப்பு ஜூலை 15-ஆம் தேதிதான் வெளியிடப்பட்டது என்றும் இதன் காரணமாக அன்வார் தனது தீர்மானங்களை முன் கூட்டியே அனுப்பியிருப்பதால் அவரின் தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் அசார் ஹாருண் தெரிவித்திருக்கிறார்.

நாளைய நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் 3 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொவிட்-19 தொற்று கண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அவர்களில் ஒருவர் அம்னோ தலைவர் சாஹிட் ஹாமிடி எனவும் அவர் கொவிட் தொற்று காரணமாக நாடாளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.