
புத்ராஜெயா: நாட்டில் இனவாதமும், இனங்களுக்கிடையிலான பாகுபாடும் அதிகரித்து வருவது தமக்கு மிகுந்த வருத்தமளிப்பதாக அமைச்சர் கோபிந்த் சிங் தெரிவித்தார்.
அண்மையில் சோளம் விற்பவர் ஒருவர், இந்தியர்களை கீழ்த்தரமாக அடையாளப்படுத்தியிருப்பது தொடர்பான பதிவு சமூக வலைத்தளத்தில் பரவலாகப் பகிரப்பட்டது தொடர்பில் அமைச்சர் தனது ஆதங்கத்தைப் பதிவிட்டார்.
“இனவாதம் என்பது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று. இனவாதமான செயல்களும், வார்த்தைகளும் நாட்டின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும். இந்திய சமூகத்தை அவமதிக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்திய சம்பவம் விரைவாக விசாரிக்கப்பட வேண்டியது அவசியம்” என அமைச்சர் திட்டவட்டமாகக் கூறினார்.
சமூகத் தலைவர்களும், மதத் தலைவர்களும், அனைத்து மலேசியர்களும் இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு, மற்றும் பரஸ்பர மரியாதையை ஊக்குவிக்குமாறு தாம் கேட்டுக் கொள்வதாக கோபிந்த் குறிப்பிட்டார்.
இன, மத, மொழி வேறுபாடின்றி ஒவ்வொரு தனிமனிதனும் நமது நாட்டில் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும். இதற்கு மலேசியர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் ஆகும்.
ஒற்றுமையும், பரஸ்பர மரியாதையும் மலேசியர்களை வழிநடத்தும் முக்கியக் கொள்கையாக அமைந்தால் மட்டுமே வளமான, சுபிட்சமான நாடாக மலேசியா தொடர்ந்து நிலைக்க முடியும் என்பதை அமைச்சர் சுட்டினார்.