
கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரின் உடல் நலம் தேறி வருவதாக அவரின் மகள் நீனா சப்ரினா தெரிவித்துள்ளார்.
எனினும் அவரின் இரத்த அழுத்தம் அதிக அளவில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக நீனா தெரிவித்தார்.
அம்னோவின் முன்னாள் உதவித் தலைவருமான டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் சுயநினைவற்ற நிலையில் நேற்று சனிக்கிழமை காலை (பிப்ரவரி 22) அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், தற்போது சுயநினைவோடு அவர் இருக்கிறார் என்றாலும் மிக பலவீனமாக இருப்பதாகவும் அவரின் ஊடகச் செயலாளர் தெரிவித்தார்.
ஷெராட்டன் நகர்வைத் தொடர்ந்து, பிரதமரான டான்ஸ்ரீ மொஹிடின் யாசின் பதவி விலகியதைத் தொடர்ந்து இஸ்மாயில் நாட்டின் 9-வது பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார். ஆகஸ்ட் 2021 தொடங்கி நவம்பர் 2022 வரை இஸ்மாயில் சாப்ரி பிரதமராகப் பதவி வகித்தார்.
2018 முதல் 2023 வரை இஸ்மாயில் சாப்ரி அம்னோவின் உதவித் தலைவராகப் பதவி வகித்தார். 2023 அம்னோ தேர்தலில் அவர் போட்டியிடவில்லை.
பகாங் மாநிலத்தில் பெரா நாடாளுமன்ற உறுப்பினராக அவர் இன்னும் தொடர்கிறார்.
2022 பொதுத் தேர்தலில் அவர் சார்ந்திருந்த அம்னோவும், தேசிய முன்னணியும், மோசமானத் தோல்வியைச் சந்தித்ததிலிருந்து அவர் பிரதமராகப் பதவி விலகினார்.